ரூ.150..பிறந்த நாளில் நண்பனை கொன்ற சிறுவன்
விருதுநகர்: விருதுநகர் அருகே ரூ. 150 தர மறுத்த தனது நண்பனை, அவனது பிறந்த நாளன்று கொடூரமாகக் கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
விருதுநகர் அருகே உள்ள பி.குமாரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். டாஸ்மாக் ஊழியர். இவரது மனைவி குருவம்மாள், தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த தம்பதியின் ஒரே மகன் சதீஷ்குமார் (14). 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சதீஷ் குமாருக்குப் பிறந்த நாள். இதையடுத்து பள்ளியில் படிக்கும் தனது நண்பர்களுக்கும், சக மாணவர்களுக்கம் இனிப்புகளை கொடுத்தான் சதீஷ் குமார்.
மதியம் பள்ளி சத்துணவை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு சென்றான். வீட்டில் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டதால் தனியாக இருந்த சதீஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
இந்த நிலையில் ராஜேந்திரனின் உறவினர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மாணவன் சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த காட்சியைப் பார்த்துப் பதறிப் போனார்.
கத்தியால் குத்தி சதீஷ் குமார் கொலை செய்யப்பட்டிருந்தான். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். சதீஷ் குமார் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது சதீஷ்குமாருடன் படித்து வரும் சந்திவீரன் என்ற மாணவனது சட்டையில் ரத்தக்கறை இருப்பதைப் பார்த்து போலீஸார் அவனைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையின்போது தான் சதீஷ் குமார் வீட்டுக்குப் போனதாகவும், அங்கு சதீஷ் பிணமாக கிடந்ததாகவும், இதையடுத்து ஓடி வந்து விட்டதாகவும் கூறியுள்ளான் சந்தி வீரன். ஆனால் போலீஸாருக்கு சந்தேகம் வலுக்கவே தீவிரமாக விசாரித்தனர்.
இதில் தான்தான் சதீஷ்குமாரை கொன்றதாக ஒப்புக் கொண்டான் சந்தி வீரன்.
இதுகுறித்து சந்தி வீரன் அளித்த வாக்குமூலத்தில்,
கடந்த மாதம் எனக்கு சொந்தமான வாக்மேனை ரூ.300-க்கு சதீஷ்குமாரிடம் விற்றேன். பாதி பணத்தை மட்டுமே தந்தான். மீதி பணம் ரூ.150-ஐ வாங்குவதற்காக அவனது வீட்டுக்கு சென்றேன்.
பணத்தை கேட்டபோது சதீஷ்குமார் தர மறுத்தான். இதனால் ஆத்திரம் அடைந்த நான் இரும்புக் கம்பியால் அவனை சரமாரியாக அடித்தேன். பின்னர் அங்கிருந்த அரிவாள் மனையால் வெட்டினேன். இதில் அவன் இறந்து விட்டான் என்று கூறியுள்ளான்.
போலீஸார் சந்தி வீரனைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மதுரையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியின் அவனை அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.