வன்னியில் நேற்று நடந்த தாக்குதலில் 32 தமிழர்கள் பலி
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை, மாத்தளன் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இலங்கைப் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதேவேளையில் அரசால் மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் வான் படையினரும் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இரண்டு தாக்குதல்களிலும் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதல் தொடர்ந்து வருவதால் படுகாயமுற்றவர்களுக்கு மருந்துகள் கூட கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. முறையான மருத்துவமனைகள் எதுவும் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளதால், வெட்ட வெளிகளிலும், மரத்தடிகளிலும் காயமுற்றவர்கள் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.
மருந்துகள் சரிவர இல்லாமல் பலர் இறந்து வரும் வேதனையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.