மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஏழு நாடுகளுக்கு தொடர்பு: இன்டர்போல்
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக இன்டர்போல் தலைவர் ரொனால்டு நோபல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் மும்பை நகரில் தாக்குதல் நடத்தினர். சுமார் 180 பேர் வரை பலியாயினர். இதில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்பை உறுதிபடுத்திய இந்தியா அது தொடர்பான ஆவணங்களை அந்நாட்டுக்கு வழங்கியது.
ஆனால் இது போதாது, மேலும் ஆவணங்கள் வேண்டும் என பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால், லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளது.
தற்போது இதில் இன்டர்போல் (சர்வதேச போலீஸ்) தலையிட்டு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது. இவர்கள் பாகிஸ்தானுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்டர்போல் தலைவர் ரொனால்டு நோபல், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கை நேற்று முன்தினம் சந்தித்தார்.
அப்போது ரஹ்மான் மாலிக் தங்களுக்கு தெரிந்த விவரங்களை அனைத்தையும் நோபலிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நோபல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் இருக்கும் இடங்களை கண்டுபிடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த சம்பவத்தில் உயிருடன் பிடிக்கப்பட்ட கசாபை பாகிஸ்தான் கேட்கிறதா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. கசாபின் டிஎன்ஏவை பாகிஸ்தான் எங்களிடம் கொடுத்துள்ளது.
இன்டர்போலின் தகவல் மையத்தில் 187 நாடுகளை சேர்ந்த தீவிரவாதிகளின் தகவல்களை வைத்துள்ளோம். இதோடு கசாபின் டிஎன்ஏவை சரி பார்க்க இருக்கிறோம்.
தங்கள் நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளின் டிஎன்ஏ, அரசுக்கு கிடைத்தால் அதன் மாதிரி ஒன்றை எங்களுக்கு தரும்படி இதுவரை எங்களுக்கு தகவல் தராத நாடுகளை கேட்டு கொள்கிறோம். அனைத்து நாடுகளும் கொடுக்காத வரையில் உலக தீவிரவாதிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி முழுமை அடையாது என்றார் நோபல்.