நாகை அருகே கடலில் மிதந்த வெடிகுண்டு பை
நாகப்பட்டனம்: நாகப்பட்டனம் மாவட்டம் பொறையாறு அருகே கடலில் வெடிகுண்டுகள், துப்பாக்கித் தோட்டாக்கள் உள்ளிட்டவை அடங்கிய பார்சல் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பொறையாறு அருகே உள்ள சந்திரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாணிக்கசாமி, தனது மகன்கள் விஜயன், விமல் ஆகியோருடன் நேற்று காலை மீன் பிடிக்கச் சென்றார்.
சந்திரப்பாடி அருகே அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஒரு பெரிய பை மிதந்து வருவதைப் பார்த்து குழம்பினர்.
உடனடியாக அந்தப் பையை மீட்டனர். அதில் பார்த்தபோது காக்கி சீருடையும், சில பொருட்களும் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மீன் பிடிப்பதை விட்டு விட்டு பையுடன் கரைக்குத் திரும்பி காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீஸார் பையை சோதனையிட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர்.
பையில், 2 கையெறி குண்டுகள், 153 நவீன ரக தோட்டாக்கள், பிஸ்கட், சாக்லெட், காக்கி சட்டை ஒரு செட், மருந்து பொருட்கள், மழை கோட் ஆகியவை இருந்தன. மேலும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இலங்கை என்ற எழுத்து பொறிக்கப்பட்ட 2003-ம் ஆண்டில் அச்சிடப்பட்ட 5 ரூபாய் காசு ஒன்றும், ஷு ஒன்றும் மற்றும் வேறு சில பொருட்களும் இருந்தன.
இவற்றை ஆய்வு செய்ய திருச்சியிலிருந்து ராணுவ நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கையெறி குண்டில் சீன எழுத்துக்கள் உள்ளதால் அவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று தெரிகிறது. இவை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேசமயம், காக்கி சீருடை இருப்பதால் இலங்கை பாதுகாப்புப் படையினரின் உடமைகளாக இவை என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.