தமிழ் மாநில சிவசேனா 9 தொகுதிகளில் போட்டி
மதுரை: வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை உள்பட 9 தொகுதிகளில் தமிழ் மாநில சிவசேனா கட்சி தனித்து போட்டியிடும் என்று அக் கட்சியின் மாநிலச் செயல் தலைவர் செல்வம் கூறினார்.
இக் கட்சியின் உயர்மட்ட அரசியல் நிர்ணய ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
-இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிட்டு போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும்.
-மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இந்து அமைப்புகளை முறைப்படி அழைக்க வேண்டும்.
-நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை, திருப்பூர், வேலூர், தென் சென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி ஆகிய 9 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம். மற்ற தொகுதிகளில் யாருக்கு வாக்களிப்பது என தேர்தல் நடைபெறும்போது முடிவு செய்யப்படும்.
இக் கூட்டதில் மாநில பொதுச் செயலாளர் குபேந்திரன், இளைஞரணி பொதுச் செயலாளர் நரசிங்கம், மாநிலச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர்கள் பரமசிவம் ராஜா (மதுரை), சாந்தி (விருதுநகர்), நரசிம்மன் (சிவகங்கை) உள்பட பலர் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் இந்து முன்னணி போட்டி:
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் பாஜக போட்டியிடாவிட்டால் நாங்கள் போட்டியிடுவோம் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 14 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் ஒன்றிய ஆலோசனை கூட்டம் மீஞ்சூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சோமு ராஜசேகர் தலைமை தாங்கினார். குணபூசனம், இருசப்பன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தவில்லை என்றால் இந்துக்களின் ஓட்டு மற்ற கட்சியினருக்கு செல்வதை தடுக்கும் விதமாக இந்து முன்னணி சார்பில் வேட்பாளரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பயங்கரவாதம், தீவிரவாதத்தை முறியடிப்பது, மதமாற்றத்தை முழுமையாக தடுப்பது, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்துவது, கோவில் சொத்துக்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.