பங்குகளை விற்ற சேர்மன்-ஏர்டெல் பங்குகள் விலை கிடுகிடு சரிவு!
டெல்லி: தனது பங்குகள் முழுவதையும் பார்தி சேர்மன் இன்று விற்பனை செய்துவிட்டதால், இன்று பார்தி நிறுவனப் பங்குகள் சந்தையில் பெரும் சரிவுக்குள்ளாயின. கிட்டத்தட்ட 5 சதவிகிதம் விலை வீழ்ச்சி கண்டது இந்த நிறுவனப் பங்குகள்.
இப்போதெல்லாம் ஒரு நிறுவனத்தின் சேர்மன் அல்லது முக்கியப் பொறுப்பிலிருப்பவர்கள் அந்த நிறுவனத்தில் தங்களுக்குச் சொந்தமான பங்குகளை விற்கிறார்கள் என்றால் என்னமோ நடக்கப் போகிறது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் இதர முதலீட்டாளர்களும். குறிப்பாக சத்யம் நிறுவனம் ஆட்டம் கண்டதன் பின்னணியில் இம்மாதிரி உள்ளடி வேலைகளே அதிகம் இருந்ததால் இப்போது முதலீட்டளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டார்கள்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சேர்மன் மனோஜ் கொஹ்லி. இவருக்கு 123,000 பங்குகள் இருந்தன அந்த நிறுவனத்தில். இவற்றை மார்ச் 6 மற்றும் 9-ம் தேதி இரு கட்டங்களாக விற்றுவிட்டார் மனோஜ். தனிப்பட்ட காரணங்களுக்காக இவற்றை விற்றுவிட்டதாக செபிக்கு தெரிவித்துள்ளார் மனோஜ்.
இந்த தகவல் இன்று வெளியாகிவிட, பார்தி நிறுவனப் பங்குகள் கணிசமாகக் குறையத் தொடங்கிவிட்டன. சுமார் 5சதவிகிதத்துக்கும் அதிகமாக விலை குறைந்து 559.9 ரூபாய்க்கு கைமாறின. இதனால் முதலீட்டாளர்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அடுத்து எந்த வடிவில் சோதனை வருமோ என்ற அச்சத்திலேயே இந்த நிறுவனப் பங்குகளை வந்த விலைக்குத் தள்ளி விடுகிறார்கள் வாடிக்கையாளர்கள் என்கிறார் டாரஸ் அஸெட் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்கே குப்தா.












Click it and Unblock the Notifications