'ஆற்காடு'.. அன்பழகன், கனிமொழி புகழாரம்
சென்னை: முதல்வர் கருணாநிதிக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒரு உறவுப்பாலமாக இருந்து வருபவர் ஆற்காடு வீராசாமி என்று புகழ்ந்தார் திமுக எம்பி கனிமொழி.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி தம்பி தேவராஜன் மகள் திருமணத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வைத்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
1962ம் ஆண்டில் ஆற்காடு வீராசாமியின் திருமணத்தை நான் நடத்தி வைத்தேன். பெரியார் மீது மதிப்பும், அண்ணா மீது அன்பும், கலைஞர் மீது பிடிப்பும் கொண்டவர் ஆற்காடு.
1957ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஆற்காடு வீராசாமி எனக்கு அறிமுகம் ஆனார். கடந்த 52 ஆண்டுகளாக நான் அவரிடம் பழகி இருக்கிறேன். அவர் என்னிடம் சகோதராய் பழகுவார்.
பக்குவமான அணுகுமுறையும், கொள்கை உறுதியும் கொண்டவர். இவருடைய நட்பு, பண்பால் இந்த இயக்கம் கட்டிக்காக்கப்படுகிறது. மற்றவர்களை முன்னிலைப்படுத்தி நம்மைப் பின்னிலைப்படுத்தும் போது நம்முடைய வாழ்க்கை சிறந்ததாக இருக்கும்.
மணமக்கள் அதை பின்பற்றி சிறப்பான முறையில் இல்லற வாழ்க்கை நடத்தினால் மகிழ்ச்சி அடையலாம். ஆண்- பெண் உறவு மட்டும் இன்பமல்ல. அது ஒரு அடையாளம் தான். மன பக்குவம் மூலம் பெறுகின்ற இன்பமே பேரின்பம் என்றார்.
திமுக எம்பியான கனிமொழி பேசுகையில்,
கட்சி நிர்வாகிகள் யாராவது தவறு செய்தால் முதல்வர் அழைத்துத் திட்டுவார். அப்போது கலைஞரை பார்க்க அவரது அறைக்கு செல்லும் போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி அருகில் இருக்கிறாரா என்று பார்த்து விட்டு தான் செல்வார்கள்.
அவர் அருகில் இருந்தால் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். தலைவர் திட்ட ஆரம்பித்தவுடன் என்ன விஷயமாக இருந்தாலும் தப்பு செய்தவர்களை காப்பாற்றுவதற்கு நல்ல வார்த்தைகளை தலைவரிடம் ஆற்காடு வீராசாமி எடுத்து கூறுவார்.
அந்த உயர்ந்த பண்பு அவரிடம் இருப்பதால் கட்சியில் எல்லோருக்கும் அவரை பிடிக்கும். தலைவருக்கும், தொண்டர்களுக்கும் இடையே அவர் ஒரு உறவுப்பாலமாக இருந்து வருபவர் அவர்.
தலைவர் இடும் கட்டளைகளை அருகில் இருந்து செய்யக்கூடியவர். நாங்கள் அருகில் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆற்காடு வீராசாமி அருகில் இருப்பதை கலைஞர் மகிழ்ச்சியாக கருதுவார் என்றார்.












Click it and Unblock the Notifications