பாஜக-அஇசமக கூட்டணி: நெல்லையில் சரத் போட்டி
சரத் கூட்டணி அமைக்கும் கட்சி பாஜகவாகும்.
தன்னுடன் யாரும் கூட்டணி அமைக்க முன் வராததால் இறுதியில் சரத்குமாருடன் பாஜக கூட்டணி பேச்சு நடத்தியது. கூட்டணிக்கு அவர் ஒப்புக் கொண்டதையடுத்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு கட்சியிலும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொது செயலாளர் கருநாகராஜன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ரவீந்திரன் துரைசாமி, செல்வராஜ், முருகன், கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகு ராஜ் ஆகியோர் அடங்கிய 5 பேர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரு குழுவிரும் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு கட்சிகளும் இணைந்து 22 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
இதில் நெல்லை, தூத்துக்குடி தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சியும், நாகர்கோவில், ராமநாதபுரம், கோவை தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
புதிதாக சீரமைக்கப்பட்ட நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் போட்டியிடுகிறார். ராதாபுரம், ஆலங்குளம், நாங்குநேரி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சரத்குமார் சார்ந்துள்ள நாடார் சமூக மக்கள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தரிசனம் செய்வதற்காக சரத்குமார் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பது முடிவாகி விட்டது. அந்த முடிவு ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்படும்.
3 கட்சிகளுடன் பேச்சு..
நான் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால் எல்லா கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். பலரும் என்னிடம் கருத்து கேட்டு வருகிறார்கள். இதுவரை 3 தேசிய கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் யாருடன் கூட்டணி என்பது பற்றிய முடிவு எடுத்தாகி விட்டது.
இந்த தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்தும், எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்? என்பது குறித்தும் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் போதே தெரிவிக்கப்படும். வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுவிடும்.
ராதிகா நாடளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்கிறீர்கள். எங்களது கட்சியின் துணைத்தலைவர் மட்டும் அல்ல எங்களது கட்சியில் உள்ளவர்கள் எல்லோருமே போட்டியிடும் வாய்ப்புள்ளவர்கள்தான் என்றார் சரத்குமார்.
சரத்துடன் பேசுகிறோம்-பாஜக:
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர்,
தென் மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு மேலிட பிரதிநிதி ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வர முடியாததால், பா.ஜ.க. தேர்தல் கமிட்டி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி பிறகு அறிவிக்கப்படும்.
சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்பட சில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் பாஜக வேட்பாளர்களை முடிவு செய்து அறிவிப்போம்.
3வது அணி தேர்தல் வரைதான் இருக்கும். தேர்தல் முடிந்தவுடன், அதில் இருக்கும் அதிமுக, பாஜகவை ஆதரிக்கும் என நம்புகிறோம்.
அதிமுகவில் சேர என்னை அழைத்ததாக வந்த தகவல் தவறானது. நான் அந்தக் கட்சிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்றார்.