பாதுகாப்பு பகுதியில் தமிழர்கள் கொலை-ஹில்லாரி கவலை
இதுதொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கவலையை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் வெள்ளிக்கிழமை இரவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என ராஜபக்சேவிடம் கேட்டுக்கொண்ட ஹில்லாரி, போர் நடைபெறும் பகுதிக்கும், இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் என்பனவற்றுக்கு மட்டுமன்றி இடம்பெயர்ந்தவர்களை விசாரணைகளுக்கு உட்படுத்தும் நிலையங்களுக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சென்று வருவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு வளையப் பகுதிகளில் உள்ள அப்பாவிகள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்.
அனைத்து சமூகத்தினரின் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதன் மூலமாகவே நிரந்தரமானதும், இறுதியானதுமான தீர்வு ஒன்றைக் காணக்கூடியதாக இருக்கும் என அமெரிக்கா நம்புவதாகவும் ஹில்லாரி தெரிவித்தார்.