தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வக்கீல்கள் கோரிக்கை
சென்னை: தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு 356 வக்கீல்கள் தந்தி அனுப்பியுள்ளனர்.
கடந்த 19ம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் மாநில அரசை 356வது பிரிவின் கீழ் கலைக்க வேண்டும் என்று கோரி 356 வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு தந்தி அனுப்பியுள்ளனர்.
கருணாநிதிக்குக் கண்டனம்:
இதற்கிடையே இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட குழு தலைவரும், உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவருமான பால் கனகராஜ் கூறுகையில், வக்கீல்கள் போராட்டம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்க பட்டபோது, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் பிரச்சனையாக இது உருவாகி இருப்பதாக கருத்து கூறியுள்ளார்.
இது பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியாகும். போலீசாரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம். நீதிபதிகளோடு எந்த பிரச்சனையும் இல்லை. இந்நிலையில் முதல்வர், நீதிபதி களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பிரச்சனை என்று கூறி திசை திருப்ப முயன்றிருப்பது கண்டனத்திற்குரியது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக இரண்டு சட்ட உதவி மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வழக்குகள் தொடர்பான உதவிகளை பொதுமக்கள் இந்த மையங்களின் மூலம் பெறலாம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications