மேகலாயாவில் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை
டெல்லி: மேகலாயா அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையி்ல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாநில ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது.
நேற்றுதான் மேகலாயா சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மேகாலயா முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நான்கு சட்டசபை உறுப்பினர்களின் வாக்குகளை செல்லாது என்று சபாநாயகர் லனோங் அறிவித்தார். அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்குகள் விழுந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக தனது வாக்கை செலுத்தி ஆட்சியைக் காப்பாற்றினார் சபாநாயகர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பி்ல மேகாலயா அரசு வெற்றி பெற்றது.
இது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. இதனால் மேகாலயா அரசியலில் பெரும் குழப்ப நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்யலாம் என்று பரிந்துரைத்து மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதினார் மாநில ஆளுநர் மூசாரே.
இதையடுத்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூடியது. மேகலாயாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பது என அப்போது முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், மேகாலயா சட்டசபையில் நடந்தது குறித்து ஆளுநர் விரிவாக விளக்கி கடிதம் அனுப்பியுள்ளார். அங்கு அரசியல் சட்டம் சீர்குலைந்து விட்டதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறும் கோரியிருந்தார்.
இதை ஏற்று சட்டசபையை முடக்கி வைக்கவும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது என்றார் சிதம்பரம்.
இதையடுத்து இன்றைக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகனடப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.