சென்னையில் ஆயிரக்கணக்கான வக்கீல்கள் பேரணி
சென்னை: சென்னையில் இன்று வக்கீல்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தினர். பல்வேறு நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்திருந்த போலீஸார், வழியெங்கும் பேரணியை வீடியோக்களில் பதிவு செய்தனர்.
இன்று காலை 11 மணிக்கு மன்ரோ சிலையிலிருந்து பேரணி தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற வக்கீ்ல்கள் சங்கத் தலைவரும், போராட்டக் குழுத் தலைவருமான பால் கனகராஜ் கருப்புக் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். வழியெங்கும் கருப்புக கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான வக்கீல்கள் இதில் கலந்து கொண்டனர். அனைவரும் சாலையோரமாக அமைதியான முறையில் அணி வகுத்துச் சென்றனர்.
பின்னர் பேரணி சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே முடிந்தது. அங்கு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் பல்வேறு வக்கீல்கள் சங்கத் தலைவர்கள் பேசினர்.
மதுரை, நெல்லை, கோவை, திருச்சி உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வக்கீல்கள் வந்திருந்தனர். புதுச்சேரியிலிருந்தும் வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர்.
100 இடங்களில் கேமரா..
முன்னதாக பேரணியையொட்டி போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பேரணியை முழுமையாக வீடியோவில் படமாக்க முடிவு செய்து, 100 இடங்களில் வீடியோ கேமராவை வைத்துப் படம் பிடித்தனர்.
வழியெங்கும் உள்ள போக்குவரத்து சி்க்னல்களில் கண்காணிப்பு கேமராக்களையும், வக்கீல்கள் பேரணியைக் கண்காணிக்க பயன்படுத்தினர். உயர்ந்த கட்டடங்களின் மாடியிலிருந்தபடி வீடியோ படம் பிடிக்கப்பட்டது.
12 கண்டிஷன்கள்..
பேரணி நடத்த வக்கீல்களுக்கு 12 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.
- பேரணியில் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
- பேரணியில் வருபவர்கள் அரசுக்கு எதிராகவோ, சாதி, மத அடிப்படையிலோ கோஷங்கள் எழுப்பக்கூடாது.
- கம்புகளில் கட்டப்பட்ட கொடிகளை கையில் ஏந்தி வரக்கூடாது.
- வன்முறையில் ஈடுபடக்கூடாது. வன்முறையை தூண்டும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அவை.
ஆனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் போலீஸாரை கண்டித்து பலமாக கோஷம் எழுப்பியபடி சென்றனர்.
பேரணியில் கலந்து கொண்ட வக்கீல்களுடன் போலீஸார் நடந்து வரவில்லை. மாறாக தொலைவிலிருந்தபடி அவர்களை கண்காணித்தனர்.












Click it and Unblock the Notifications