அதிமுக கூட்டணியே வேண்டாம் - வி.சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடந்தது.
வேளச்சேரியில் நடந்த இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம். திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினராம்.
மேலும், கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தபோது அதிமுகவினர் தங்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினர் என்பதையும் அவர்கள் மனக் குமுறலுடன் விளக்கியுள்ளனர்.
இப்படிப் பலவகையிலும் அதி்முகவுடன் சேருவதால் ஏற்படும் பாதகங்களை விளக்கிய அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே கூடாது என்றும் கோரினர்.
இதைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை திருமாவளவனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:
- முதல்-அமைச்சர் கருணாநிதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடையில் சாதி ஒழிப்பு, சமத்துவம், பொதுவுடமை போன்ற கொள்கை அடிப்படையிலான உறவு உள்ளது எனவும் இவ்வுறவு தொடரும் எனவும் அறிவித்திருப்பதை மனப்பூர்வமாக வரவேற்று முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
- சில ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பா.ம.க.வும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் மூலம் மிகுந்த இணக்கத்தோடும் தோழமையோடும் இணைந்து செயல்பட்டு வந்துள்ளன. இந்த நல்லிணக்க உறவு தேர்தல் களத்திலும் இவ்விரு கட்சிகளிடையே தொடர வேண்டுமென்பது இரு கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மட்டம் வரையிலான எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, இவ்விரு கட்சியினரும் ஒரே கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதையே இக்கூட்டம் விரும்புகிறது என்று அந்த தீர்மானங்கள் கூறுகின்றன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் திருமாவளவன். அதிமுக கூட்டணியில் சேர உங்களை ராமதாஸ் அழைத்ததாகவும், நீங்கள் மறுத்து விட்டதாகவும் கூறப்படுவது குறித்து கேட்ட கேள்விக்கு, டாக்டர் ராமதாஸ் தொலைபேசியில் என்னை தொடர்பு கொள்ளவில்லை. 19-ந் தேதி மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள பொங்குதமிழ் அறக்கட்டளைக்கு சென்று நான் அவரை சந்தித்து பேசியது உண்மைதான்.
இன்றைய தமிழக அரசியல் நிலை, எதிர்காலத்தில் இரு கட்சிகளின் ஒற்றுமை ஆகியவை குறித்து வெகு நேரம் பேசினோம்.
கூட்டணி தொடர்பாக அதிமுகவிடமிருந்து அழைப்பு எதுவும் இதுவரை வரவில்லை. அழைப்பு வந்தால் என்ற யூகமான கேள்விக்குப் பதிலளிக்க முடியாது.
22-ந் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டி கூட்டணி பற்றிய முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிக்கிறார். அதன் அடிப்படையில் அதன் பிறகு நாங்கள் முடிவு செய்வோம் என்றார் திருமாவளவன்.
தேர்தலுக்குப் பிறகு அணி மாறுவீர்களா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு முன்பு ஒரு அணி, பின்னர் ஒரு அணி என்பதுதான் இன்றைய அரசியல் நிலை. காங்கிரஸுக்கு எதிராக இன்று அதிமுக அணிக்குச் செல்லும் வாக்குகள் நாளையே காங்கிரஸுக்கு சாதகமாக திரும்பலாம். தேர்தலுக்குப் பிறகு கட்சிகள் அணி மாறலாம் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications