124 தொகுதிகளுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

லோக்சபாவுக்கு ஐந்து கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக 124 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான முறையான அறிவிப்பை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாளை வெளியிடுகிறார். அன்று முதலே வேட்பு மனு தாக்கல் தொடங்கும்.
மொத்தம் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 124 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
முதல் கட்ட லோக்சபா தேர்தலுடன், ஆந்திர மாநிலத்தில் உள்ள 154 (மொத்தம் 294) சட்டசபைத் தொகுதிகள், ஒரிசாவில் உள்ள 70 (மொத்தம் 147) சட்டசபைத் தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இவற்றுக்கான அறிவிக்கையை சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர்கள் வெளியிடுவர்.
நாளை தொடங்கும் வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 2ம் தேதிக்குள் மனுக்களை திரும்பப் பெற வேண்டும்.
2வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதியும், மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு 30ம் தேதியும், நான்காவது கட்ட வாக்குப் பதிவு மே 7ம் தேதியும், இறுதிக் கட்ட வாக்குப் பதிவு மே 13ம் தேதியும் நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை மே 16ம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் மே 13ம் தேதி இறுதி கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 71.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம் 543 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
முதல் கட்ட வாக்குப் பதிவுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி ஓய்வு பெறுகிறார். மற்ற நான்கு கட்ட வாக்குப் பதிவுகளும், புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவின் தலைமையின் கீழ் நடைபெறும்.
முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களும், தொகுதிகளின் எண்ணிக்கையும் ..
ஆந்திரா (22), கேரளா (20), உ.பி (16), மகாராஷ்டிரா (13), பீகார் (13), சட்டீஸ்கர் (11), ஒரிசா (10), ஜார்கண்ட் (6), அசாம் (3), அருணாச்சலபிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் நிக்கோபார் (1), லட்சத்தீவு (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), மணிப்பூர் (1), காஷ்மீர் (1).












Click it and Unblock the Notifications