கொழும்பை உலுக்கிய குண்டுச் சத்தம்- மக்கள் பீதி - ஒத்திகை என்கிறது கடற்படை
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் நேற்று காலையில் பலத்த குண்டுச் சத்தங்கள் கேட்டன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். ஆனால் இது ஒத்திகை நிகழ்ச்சிதான் என்று கடற்படை கூறியுள்ளது.
நேற்று காலை 6.30 மணி முதல் சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குண்டுச் சத்தமும், துப்பாக்கிச் சத்தமும் கேட்டது.
துறைமுகப்பகுதியில் இருந்து கேட்ட இந்த சத்தங்களால் கொழும்பு நகரில் தாக்குதல் நடைபெறுகின்றதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.
கொழும்புத் துறைமுகத்தை அடுத்துள்ள பகுதிகளில் திடீரென கடற்படையினரும் குவிக்கப்பட்டு வீதிகளும் மூடப்பட்டன.
இதனால் மக்களின் பீதி அதிகரித்தது. ஆனால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. இது கடற்படையினர் நடத்திய ஒத்திகைதான். துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எப்படி சமாளிப்பது என்பதற்கான ஒத்திகை என்று கடற்படை விளக்கம் அளித்தது. இதையடுத்து மக்கள் பீதி அகன்று சகஜ நிலைக்குத் திரும்பினர்.