தடியடி-வக்கீல்களுக்கு மருத்துவப் பரிசோதனை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸார் நடத்திய தாக்குதலில் காயமடைந்த வக்கீல்களுக்கு, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் பரிந்துரைப்படி இன்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
பிப்ரவரி மாதம் 19ம் தேதி மாலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வரலாறு காணாத மோதல் மூண்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர் காயம் அடைந்த வக்கீல்களுக்கு தொடர் சிகிச்சை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன்படி உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய மருத்துவ கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி காயம் அடைந்த வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் ஆகியோரை மருத்துவ பரிசோதனை தொடர்பாக அழைத்தது. இதையடுத்து இன்று காலை சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதற்கு உயர்நீதிமன்றப் பதிவாளர் நல்ல சேனாதிபதி தலைமை வகித்தார். 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் குழு வக்கீல்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியது.
இதில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமை வக்கீல்கள் சங்கப் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
இருப்பினும், உயர்நீதி்மன்ற மோதலில் போலீஸாரின் தவறுகள் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த ஒரு நபர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், எங்களுக்கு எதிராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் தீர்மானம் போட்டுள்ளது. எனவே அந்த சங்கத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி நடத்தும் விசாரணையை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications