எவ்வளவு பணம் இருக்கு?-நேர்காணலில் விஜயகாந்த்
திமுக, அதிமுகவினருக்கு இணையாக செலவு செய்ய உங்களிடம் பணம் உள்ளதா என்பதே அவர் கேட்கும் முக்கிய கேள்வியாக உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நேர்காணலின்போது விஜயகாந்த் தவிர, இளைஞரணிச் செயலாளரும் அவரது மச்சானுமான சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, துணைச் செயலாளர் ஆஸ்டின், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.
அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை நேர்காணலின்போது பார்க்கவே முடியவில்லை. அவரை ஓரம் கட்டிவிட்டனர்.
தேர்தலில் கூட்டணியா இல்லையா என்பதை இன்னும் தெளிவாக அறிவிக்காத விஜயகாந்த் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிக்கும் வேட்பாளர் நேர்காணலை நடத்திக் கொண்டுள்ளார்.
நேர்காணலுக்குச் சென்றவர்களிடம் முக்கியமாக கேட்கப்பட்ட கேள்விகள், தேர்தலில் உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும், எவ்வளவு பணம் வைத்துள்ளீர்கள், எவ்வளவு சொத்து உள்ளது என்பதே.
மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்லி, இவ்வளவு பணத்தை செலவிட உங்களால் முடியுமா என்றும் விஜய்காந்த் கேட்டதாக சொல்கிறார்கள் நேர்காணலுக்கு போய் வந்த சிலர்.
அந்த அமெளண்டைக் கேட்ட பலரும் அதிர்ந்து போய், எனக்கு சீட்டே வேண்டாம் என்று அங்கேயே பின் வாங்கியுள்ளனர்.
இந் நிலையில் மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 11 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் இன்று நடக்கிறது.
நாளை கன்னியாகுமரியில் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.