15 ஆண்டு தேடப்பட்ட கடத்தல்காரன் கைது-ரூ. 5 கோடி சிலைகள் பறிமுதல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவன் சஞ்சீவி அசோகன் (44). சென்னையில் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தான். இதன்மூலம் தமிழ்நாட்டு கோவில்களில் திருடப்பட்ட பழமையான சிலைகளை யாருக்கும் தெரியாமல் வெளிநாடுகளுக்கு கப்பல் கொண்டு சென்று விற்று வந்தான். இவனை கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாடு போலீசார் தேடி வருகின்றனர்.
இந்திய சிலைகளுக்கு மேற்கத்திய நாடுகளில் நல்ல கிராக்கி இருந்ததை அடுத்து இவரிடம் கோடி கணக்கில் பணம் சேரத் துவங்கியது. தமிழகத்திற்கு வந்தால் போலீசார் பிடித்துவிடுவார்கள் என்பதால் கொச்சி, திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, டெல்லி என ஊர் ஊராக சுற்றி வந்தார்.
இவருக்கு சென்னை வாலாஜா ரோட்டில் 2 வீடுகள் உள்ளன. தொடர்ந்து கையில் சிக்காமல் ஏமாற்றி வரும் இவரை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என திட்டமிட்ட பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி திலகவதி, ஐ.ஜி. ராஜேந்திரன், டி.ஐ.ஜி. ஆறுமுகம், துணை சூப்பிரண்டுகள் செல்வராஜ், எபனேசர், இன்ஸ்பெக்டர் காதர் பாட்சா ஆகியோர் தலைமையில் தனி படை அமைத்தார்.
சிலை வாங்கி விற்கும் வியாபாரிகள் வேடத்தில் தனிப்படை போலீசார், சஞ்சீவி அசோகனை தேடி வந்தனர். இந்த நிலையில் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சஞ்சீவி அசோகன் தங்கியிருப்பதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் சஞ்சீவி அசோகன் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலை முற்றுகையிட்டனர். போலீசை பார்த்ததும் சஞ்சீவி அசோகன் தப்பி ஓட முயன்றார்.
ஆனால், போலீசார் அவனை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அவனுக்கு சொந்தமான கடையிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் போலீசார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 அம்மன் சிலைகள், ஒரு புத்தர் சிலை உள்பட 12 சிலைகள் சோதனையில் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள ஸ்ரீபுரம்தானில் இருந்த பிரகதீஸ்வரர் கோவிலில் திருடிய சாமி சிலைகளை கொல்கத்தாவில் இருந்து கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு கடத்தி சென்று விற்றதை அசோகன் ஒப்புக்கொண்டார்.
இதை தொடர்ந்து அவனது கூட்டாளிகளான ரத்தினம், கலியபெருமாள், சிவக்குமார், பிச்சுமணி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சஞ்சீவி அசோகனின் கடத்தல் வேலைகளுக்கு, அவரது மனைவி பிரீத்தாவும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். போலீசாரின் நடவடிக்கைகளை கண்காணித்து தனது கணவருக்கு பிரீத்தா தகவல் கொடுத்து வந்ததாகவும் போலீசார் கருதுகிறார்கள்.
அசோகனிடம் இருந்து 15 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்த போலிசார் அதன்மூலம் அசோகனுக்கு சர்வதேச அளவில் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து கூடுதல் டிஜிபி திலகவதி கூறுகையில்,
கடந்த 15 ஆண்டுகளாக தேடப்பட்ட இவர்களை நேற்று முன்தினம் தான் கைது செய்ய முடிந்தது. அவன் சென்னையில் சிலை வாங்கி, விற்கும் தொழிலை சத்தம் காட்டாமல் செய்து வந்துள்ளான். திருட்டு சிலைகளை விற்று பணம் சம்பாதித்துள்ளான். அவன் மீது ஏற்கனவை 12 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவனிடம் இருந்து ரூ. 5 கோடி மதிப்பிலான சிலைகள் கைப்பற்றப்பட்டன. அவன் இதுவரை இந்திய மதிப்பில் ரூ. 100 கோடி பெறுமானவுள்ள சிலை விற்றுள்ளார். இதன் வெளிநாட்டு மதிப்பு இன்னும் அதிகம் என்றார் திலகவதி.












Click it and Unblock the Notifications