அதிமுக 'பேவரைட்' மண்டபத்தில் கூடிய பாமக பொதுக்குழு
சென்னை: அதிமுகவுக்கு மிகவும் ராசியான, ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பாலஸ் கல்யாண மண்டபத்தில் தான் இன்று பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
இந்த மண்டபத்தில் பொதுக்குழுவைக் கூட்டியிருப்பதன் மூலம், சிம்பாலிக் ஆக தான் அதிமுக கூட்டணிக்குப் போகவிருப்பதை டாக்டர் ராமதாஸ் முன் கூட்டியே உணர்த்தியதாகத் தெரிகிறது.
சென்னை அருகே உள்ளது வானகரம். இங்குதான் இந்த ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பாலஸ் திருமண மண்டபம் உள்ளது. கடந்த சில வருடங்களாக அதிமுகவின் முக்கிய கூட்டங்கள் அனைத்தும் இங்குதான் நடந்து வருகின்றன. குறிப்பாக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் இங்குதான் நடக்கின்றன.
முன்பெல்லாம் அதிமுக தலைமைக் கழககத்திற்கு அடுத்த கட்டடத்தில் உள்ள ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில்தான் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவாரி மண்டபத்திற்கு இடம் பெயர்ந்தார் ஜெயலலலிதா. அது அவருக்கு ராசியாகிவிடவே தற்போது ஸ்ரீவாரி அதிமுகவின் ஆஸ்தான மண்டபமாகி விட்டது.
இந்த கல்யாண மண்டபத்தின் உரிமையாளர் கோவிந்தராஜ். இவர் வேறு யாருமல்ல, அதிமுகவின் வானகரம் பகுதிச் செயலாளர் ஆவார். இவருடைய மகன் பாமகவைச் சேர்ந்தவர். எனவே, ஏற்கனவே அதிமுகவுக்கும், பாமகவுக்கும் 'குடும்பக்' கூட்டணி உறுதியாகி விட்டது.
வழக்கமாக பாமகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்கள் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் முதல் முறையாக வானகரம் கல்யாண மண்டபத்திற்கு, அதுவும் அதிமுகவின் ஆஸ்தான கல்யாண மண்டபத்திற்கு நடந்தது சுவாரஸ்யமானதுதான்.
இது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications