கறுப்பு ரவிக்கை: ஏர் இந்தியா பணிப்பெண்கள் அதிருப்தி!
மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பணிப்பெண்களின் சீருடை ஏப்ரல் 1-ந் தேதி முதல் கறுப்பு நிறத்துக்கு மாறுகிறது.
இதற்கு விமானப் பணிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் பலமான போட்டியைச் சமாளிக்கும் விதத்தில் பல்வேறு மாறுதல்களைச் செய்து வருகிறது ஏர் இந்தியா நிறுவனம்.
இதன் ஒரு பகுதியாக சர்வதேச பயணிகளை கவரும் வகையில், தனது விமான பணியாளர்களுக்கு புதிய சீருடையை ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தவுள்ளது.
ஏர் இந்தியா அறிமுகம் செய்யவுள்ள பணிப்பெண்களுக்கான புதிய சீருடையில், சேலையில் கருப்பு-சிவப்புக் கோடுகள் உள்ளன. இந்த கோடுகள் குறுக்குவெட்டில் அமைந்துள்ளன. இதுபோல், ரவிக்கையில் கருப்பு நிறமும் கலந்து வருகிறது. இதற்கு தென்னிந்தியாவை சேர்ந்த விமான பணிப் பெண்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தென்னிந்தியாவில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கருப்பு நிறம் அபசகுணத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இதனால் புதிய சீருடைக்கு, தென்னிந்தியாவைச் சேர்ந்த விமானப்பெண்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
மேலும் தென்னிந்தியப் பெண்கள் சிவப்பு நிறமே ரவிக்கையே தங்கள் அழகை எடுப்பாகக் காட்டும் என நம்புவதால் கறுப்பு நிற சீருடைக்கு கடும் எதிர்ப்பு காட்ட முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி விமான பணியாளர்கள் சங்க தலைவர் பரத்குமார் ரவுத் கூறுகையில், 'புதிய சீருடையை பற்றி முடிவெடுக்கும்போது பெண் சிப்பந்திகளை அவர்கள் கலந்தாலோசிக்கவில்லை. இதுமட்டுமின்றி, சேலையில் குறுக்கு கோடுகள் இடம் பெறுவதையும் பல பெண்கள் விரும்பவில்லை' என்றார்.
நிர்வாகத்தின் இந்த சீருடை மாற்ற முடிவை எப்படி எதிர்ப்பது என்பது குறித்து விமான பணிப்பெண்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.