இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கவில்லை-கப்பற்படை தலைவர்
ராமநாதபுரம்: இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. ஆயுதம் வழங்குவதாக கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என இந்திய கப்பற்படை சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் நடந்த விழாவில் இந்திய கப்பற்படை தலைவர் சுரேஷ் மேத்தா கலந்து கொண்டு, ஐஎன்எஸ் பருந்து என்ற கப்பலை, கப்பற்படைக்கு அர்ப்பணம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன், இந்தியா அதிக அளவில் வாணிபம் வைத்துள்ளது. இதனால் வங்க கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து வருகிறோம். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு கடல் பாதுகாப்பு முக்கியமானது. ஐஎன்எஸ் பருந்து கிழக்கு கடலோர பகுதிகளை பாதுகாப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும்.
இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு உதவுவதாக சில தமிழக அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை. இது அடிப்படை அற்ற குற்றச்சாட்டு. இந்தியாவை பொறுத்தவரை விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு. அதற்கு யாரும் உதவ முடியாது. அதே சமயத்தில் இலங்கை ராணுவத்துக்கு எந்த ஆயுதமும் வழங்கவில்லை.
கச்சத்தீவை புனித பகுதியாக இலங்கை அறிவிக்கப்போவது குறித்து எதுவும் தெரியாது. அப்படி எதுவும் இருக்குமானால் அது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் சுரேஷ் மேத்தா.