5 ஆண்டுகள்..ஒரு கேள்வி கூட கேட்காத தங்கபாலு!

நாடாளுமன்றத்திற்குப் போவதையே பெருமையாக நினைப்பவர்கள் பலர் உள்ளனர். அந்த பாக்கியம் அத்தனை இந்திய குடிமக்களுக்கும் கிடைத்து விடுவதில்லை.
அப்படிப்பட்ட புண்ணியம் கிடைக்கும் எம்.பி்க்கள் அங்கு போன பின்னர் எப்படி மாறிப் போய் விடுகிறார்கள் என்பதை அறிந்தால் கல் மனசும் வேதனைப்படும்.
காரணம், பல எம்.பிக்கள் அங்கு போய் வருவதோடு சரி. ஒரு கேள்வி கூட கேட்பதில்லை. மற்றவர்கள் பேசுவதை வாய் மட்டும் பார்த்து விட்டு திரும்பும் எம்.பிக்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பது, அவர்களைத் தேர்ந்தெடுத்த அப்பாவி மக்களின் தலையெழுத்து என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் பல லட்சம் செலவிடப்படுகிறது. ஆனால் கேள்வி - நேரம் என்ற அருமையான வாய்ப்பை எத்தனை எம்.பிக்கள் உருப்படியாக பயன்படுத்துகிறார்கள் என்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
சமீபத்தில் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, 14வது லோக்சபா கூட்டத்தின் கடைசி நாளின்போது, பல எம்.பிக்கள் ஒரு கேள்வி கூட கேட்காமல் ஐந்து ஆண்டுகளை கழித்து விட்டனர். இது வேதனை தருகிறது என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட பேசா மடந்தைகள் பட்டியலில் நம்ம ஊர் எம்.பிக்கள் சிலரும் உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்வி கூட கேட்காத தமிழக எம்.பிக்கள் இவர்கள்தான் - சேலம் தங்கபாலு (காங்.), பொள்ளாச்சி கிருஷ்ணன் (மதிமுக), நாகப்பட்டனம் ஏ.கே.எஸ். விஜயன் (திமுக), வேணுகோபால் (திமுக).
புதுமுக எம்.பியான ராதிகா செல்வி ஐந்து ஆண்டுகளில் நான்கு கேள்விகள் கேட்டுள்ளார். இதில் கடைசி 2 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருப்பவர்கள் கேள்வி கேட்க முடியாது என்பதால் கடைசி 2 ஆண்டுகளில் இவர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.
தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த சேலம் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, எல்லோரும் சுபிட்சமாக, சுகமாக, சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று தங்கபாலு நினைத்து விட்டாரோ என்னவோ..!












Click it and Unblock the Notifications