கொலையை மறைத்து பணத்துக்காக பிணம் விற்ற போலீஸ்
பெங்களூர்: பெங்களூரில் கொலைகாரனிடம் பணம் வாங்கி கொண்டு பிணத்தை விற்ற நான்கு போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் மடிவாலாவில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் கடநத் 2006ல் கவேரியப்பா என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர் நஞ்சுண்டப்பா, ஆதிராஜ் மற்றும் விஜயகுமார் ஆகிய நால்வரும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அதில் கவேரியப்பா பலமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடலில் 32 இடங்களில் காயம் ஏற்பட்டதுக்கான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து இந்த நான்கு போலீசாரும் கொலையாளியை கண்டுபிடித்து உள்ளனர். அப்போது கொலையாளி இவர்களுக்கு பணம் கொடுக்க முன்வந்துள்ளான்.
இதையடுத்து அந்த 4 போலீசும் சேர்ந்து பணத்தை வாங்கி கொண்டு பிணத்தை விற்றுள்ளனர். இந்நிலையில் கவேரியப்பாவின் உறவினர் ஒருவர் அவரை காணவில்லை என இவர்களிடமே புகார் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு பணம் கிடைப்பதில் சிக்கலாக இருக்கும் என கருதி அவர் கொடுத்த புகாரையும் போலீசார் மறைத்துள்ளனர். இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இவர்கள் நான்கு பேரும் கொலையை மறைப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அது தொடர்பாக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.
தங்களது கடமையை சரிவர செய்யாதது. கொலையை மறைந்தது. மனுதாரர் கொடுத்த புகார் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை மறைத்தது. கொலையாளியிடம் பணம் பெற்றது போன்ற காரணங்களுக்காக இந்த நான்கு போலீசாரையும் பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் சங்கர் பிதரி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.