நாளை ஜி 20 மாநாடு-லண்டனில் மன்மோகன் சிங்
லண்டன்: ஜி20 மாநாட்டுக்காக பிரதமர் மன்மோகன் சிங் லண்டன் சென்றுள்ளார். நாளை மாநாடு தொடங்குகிறது. நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது.
லண்டன், எக்ஸல் மையத்தில் நான்கு நாள் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. நாளை இந்த மாநாடு தொடங்குகிறது.
இதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய உயர் மட்டக் குழு லண்டன் சென்றுள்ளது. இந்தியக் குழுவில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
தனது பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார் மன்மோகன் சிங்.
அதிபரான பின் இங்கிலாந்துக்கு ஒபாமா வருவது இதுவே முதல்முறையாகும்.
தீவிரவாத சதி-5 பேர் கைது:
இதற்கிடையே, எக்ஸல் மையத்தில் நாச வேலைக்குத் திட்டமிட்டிருந்ததாக ஐந்து பேரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். அவர்களிடமிருந்து கத்தி, துப்பாக்கிகள், சந்தேகத்திற்கிடமான கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்றும், அவர்கள் தேவான், பிளைமவுத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் வடக்கு அயர்லாந்து போராட்டக் குழுவினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.