ஆபரேஷன் மூலம் நூற்றுக்கணக்கானோரை அரவாணியாக மாற்றிய ஆந்திர டாக்டர் கைது
சென்னை: விபச்சாரத்தில் ஈடுபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்களை ஆபரேஷன் மூலம் அரவாணியாக மாற்றி அவர்களது வாழ்க்கையில் விளையாடிய ஆந்திர டாக்டர் ஒருவரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்தை சேர்ந்த சிறுவன் வினோத்குமார் (16), கடந்த 2006ம் ஆண்டு வீட்டில் கோபித்து கொண்டு வெளியேறினான். அவனை அரசி என்ற அரவாணி தன்னுடன் வட மாநிலத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வினோத் குமாருக்கு பல அரவாணிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த அங்காளம்மாள் என்ற அரவாணி, வினோத் குமாரை புனேவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வினோத் குமார் விபச்சார கும்பல் ஒன்றிடம் விற்கப்பட்டுள்ளார்.
அந்த கும்பல், சாந்தி என்ற அரவாணியிடம் வினோத்குமாரை விற்றுள்ளது. இந்நிலையில் சாந்தி ஆந்திராவில் உள்ள கடப்பாவைச் சேர்ந்த 75 வயதான டாக்டர் நாகண்ணா என்பவரிடம் வினோத் குமாரை அழைத்துச் சென்றது. அவர் அந்த சிறுவனை ஆபரேஷன் மூலம் அரவாணியாக மாற்றியுள்ளார்.
இதையடுத்து அவனுக்கு திரிஷா என பெயர் மாற்றப்பட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார். இந்நிலையில் மாலதி என்ற அரவாணி மூலம் தப்பி தனது வீட்டுக்கு வந்த அவர் சென்னை போலீசில் புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து அரசி, சுப்பு, ராதா, சாந்தி, குட்டியம்மா, ஜோதி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் கடப்பாவில் இருந்த நாகண்ணாவை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.
கல்லூரியில் தங்க மெடல் வாங்கியவர்...
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் நாகண்ணாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில்,
டாக்டர் நாகண்ணா சிறுவர்களை அரவாணிகளாக மாற்றுவதில் கைதேர்ந்தவர் என்றும், ரூ.5 ஆயிரத்துக்காக இந்த கொடூர ஆபரேஷன்களை செய்து வந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. இவர் 100க்கும் மேற்பட்ட சிறுவர்களை அரவாணிகளாக மாற்றி உள்ளார்.
அவர் கர்னூல் அரசு மருத்துவ கல்லூரியில் படித்த போது தங்க மெடல் வாங்கிய மாணவர். அவர் கர்னூல் மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றியுள்ளார் என்றார்.