விஜயகாந்துக்கு கூடும் கூட்டம்-உளவுப்பிரிவு உஷார்!

பெரும்பாலும் பிரியாணி பொட்டலம், 100 ரூபாய், போக வர வாகன வசதி, ஆண்களுக்கு டாஸ்மாக் சரக்கு வினியோகம் என பல வகையான வேலைகளை செய்து தான் கட்சிகள் கூட்டம் கூட்டுவது வழக்கம்.
ஆனால், விஜய்காந்தைப் பொறுத்தவரை தானாகவே வந்து கூடுகிறது கூட்டம். கடும் வெயிலிலும் கூடிய இந்தக் கூட்டம் குறித்து உளவுப் பிரிவினர் அனுப்பி வரும் ரிப்போர்ட் திமுகவையும், கட்சியினர் தரும் தகவல் அதிமுகவையும் அதிர வைத்துள்ளதாம்.
கிராமப் பகுதிகள் தவிர நகர்ப் பகுதிகளிலும் விஜயகாந்த்துக்கு பெரும் கூட்டம் கூடி வருகிறது.
இந்தக் கூட்டத்தை வீடியோ எடுத்து ஆள் எண்ணும் வேலையில் உளவுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் திருச்சி தொகுதியில் தனது கட்சியின் வேட்பாளர் விஜயகுமாரை ஆதிரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகின்றனர். அவர்கள் கூட்டணி பலத்தை நம்புகின்றனர்.
தேமுதிக மக்கள் பலத்தை நம்பி போட்டியிடுகிறது. இதனால் தேமுதிக மக்கள் மனதில் கல்வெட்டு போல் உறுதியாக எழுதப்பட்டுவிட்டது. தேர்தலில் வெல்வது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். மக்கள் பிரச்னையை முன்னிறுத்தி தேமுதிக பிரசாரம் செய்வதால், தேமுதிகவைப் பற்றி பேசுவதற்கு திமுகவும், அதிமுகவும் தயங்குகிறது.
மத்தியில் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி காங்கிரஸ் கட்சிக்குத்தான் உள்ளது. வேறு எந்த மாநிலக் கட்சிக்கும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து கூறியுள்ளார். சொந்த காலில் நிற்கமுடியாமல் கூட்டணி வைத்து வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு இதை சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை.
மின்சாரத்துக்கு விடுமுறைவிட்ட கலைஞர்...
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்தார்களே, இவர்களால் காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையை தீர்க்க முடிந்ததா?. மின்சாரத்துக்கு தினமும் விடுமுறை விட்ட ஒரே முதல்வர் கருணாநிதிதான். மின்வெட்டுப் பிரச்னைக்கு கருணாநிதி மட்டும் காரணமல்ல, இதற்கு முன்னர் ஆட்சி செய்த ஜெயலலிதாவும்தான்.
அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இப்போது பிரச்னை இருந்திருக்காது. இப்போது இவர்கள் திட்டத்தை அறிவித்திருந்தாலும் அத்திட்டம் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் வரை ஆகும். அதுவரை தினமும் மின்வெட்டு அவதியை மக்கள் அனுபவித்துதான் ஆக வேண்டும்.
விடுதலை புலி மிரட்டலா... திசை திருப்பும் யுக்தியா...
இலங்கைத் தமிழர்களுக்காக என்ன குரல் கொடுத்தார்கள்? திமுக தலைவர் கருணாநிதியை கொல்ல விடுதலைப்புலிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக கடிதம் வந்துள்ளது என்று கூறுகிறார்கள். மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இப்படி கூறுகிறார்கள்.
5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புத் தருவதாகக் கூறினார்களே தவிர, இதுவரை 25,000 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு அளித்துள்ளனர். பொருளாதார நிலை சரியில்லாத காரணத்தினால் பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
பெண்களுக்கு 33 சத இடஒதுக்கீடு வழங்குவதாக கடந்த 30 ஆண்டுகளாக பேசுகிறார்களே தவிர, அதற்காக எந்த வேலையையும் செய்யவில்லை. மத்திய அமைச்சரவையில் 10 ஆண்டுகளாக அங்கம் வகித்த இவர்கள், கரும்புக்கும், நெல்லுக்கும் விலையை உயர்த்தி வாங்கித் தந்தார்களா?. கோதுமைக்குத்தான் விலையை உயர்த்தி தந்துள்ளனர்.
தோசை போல் புரட்டி போடாதீர்கள்...
தமிழகத்தில் வாக்காளர்கள் தோசையை புரட்டு போடுவது போல திமுக, அதிமுகவுக்கு ஓட்டு அளித்து வருகிறார்கள். முதலில் அந்த அதை மாற்றுங்கள். தேமுதிகவுக்கு ஓட்டு போடுங்கள்.
உங்கள் கஷ்டம் எனக்குத் தெரியும். நான் சாலையில் படுத்து தூங்கியவன். வறுமையை உணர்ந்தவன். பெண்கள் மனது வைத்தால்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஏற்கெனவே என் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தினார்கள். என்னுடைய திருமண மண்டபத்தை இடித்து தள்ளினார்கள். தற்போது நான் மக்கள் பிரச்சினையை விரிவாக பேசி வருவதால் என்னைக் கைது செய்து தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவிடாமல் தடுக்க திட்டமிட்டுள்ளனர் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications