மதிமுக, சிபிஎம் சிக்கல் இன்று தீரும் என்கிறார் பரதன்
சென்னை: அதிமுக கூட்டணியில் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிப் பிரச்சினை இன்றைக்குள் தீர்ந்து விடும். இந்தக் கூட்டணி வலுவான கூட்டணியாக திகழும் என்று சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.
நேற்று சென்னை வந்தார் பரதன். முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கட்சியின் தமிழ் மாநில தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.
பின்னர் போயஸ் தோட்டத்திற்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசினார். அவருடன் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசியச் செயலாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வடசென்னை, நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 3 அல்லது நான்கு நாட்களில் பெயர்களை அறிவிப்போம்.
எங்கள் அணி தகுதியுடனும், வலுவாகவும் இருப்பதால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத 3-வது அணி ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டிலும் இந்த அணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழ்நாட்டைப்போல மற்ற மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் மற்ற கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகள் எங்களது கூட்டணியில் வந்து சேர்கின்றன.
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துவிட்டது.
ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டு பிரச்சினை திங்கள்கிழமை முடிவடையும். நாங்கள் இந்த பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்படவில்லை.
அ.தி.மு.க. கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் கூட்டு பிரசாரம் வரும் 16-ந் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது. பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ஜெயலலிதா எங்களுக்கு அழைப்பு விடுத்தார். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
கடந்த 2 தேர்தல்களில் பா.ஜ.க.வுடன் இருந்த பிஜ× ஜனதாதளம், இந்த தேர்தலில் எங்கள் அணியில் சேர்ந்துள்ளது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுகிறது. இந்த இரண்டு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் இந்த கட்சி, எங்களுடன் அணி சேர்ந்துள்ளது.
உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் லல்லுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியான லோக் ஜனசக்தி, முலாயம் சிங் கட்சியான சமாஜ்வாடி கட்சி ஆகியவை காங்கிரஸ் கட்சியை ஓரம்கட்டிவிட்டன.
தேர்தலுக்கு பிறகு பிரதமர் பற்றி 3-வது அணி அறிவிக்கும். இப்போதே பிரதமர் யார் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
3-வது அணி ஆட்சிக்கு வந்தால், இந்திய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாற்று பொருளாதார கொள்கை மற்றும் வெளிவிவகார கொள்கையை அமல்படுத்துவோம் என்றார் பரதன்.