மதிமுக கேட்பதும்.. அதிமுக தர தயாரக உள்ளதும்..

மதிமுக கோரும் 5 தொகுதிகளைத் தர அதிமுக தயாராக இல்லை. இவர்களுக்கு 4 சீட்கள் மட்டுமே தரப்படும் என்று திட்டவட்டமாகக் கூறி வருகிறது அதிமுக.
கடந்த முறை மதிமுக 4 இடங்களில் போட்டியிட்டு வென்றாலும் இப்போது உங்களிடம் மிஞ்சியிருப்பது (செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் போன பிறகு) இரண்டு எம்பிக்கள் தானே. இதனால் உங்களுக்கு 3 தொகுதிகளை மட்டுமே தருவது தான் சரி என்று அதிமுக பேசிய லாஜிக் புரியாமல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நொந்து போக, போனால் போகட்டும் 4 தருகிறோம் என்றது அதிமுக.
ஆனால், 5 வேண்டும் என்ற மதிமுகவிடம் அப்படியானால் நாங்கள் தரும் தொகுதிகளை ஏற்க வேண்டும் என அதிமுக கண்டிசன் போட அதை வைகோ ஏற்கவில்லை. வைகோ மாற்று வழி காண முயற்சிப்பதாகவும் பாஜகவிடம் அவர் பேசி வருவதாகவும் அதிமுகவுக்கு தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் வந்தால் வரட்டும் போனால் போகட்டும் என்ற முடிவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வந்துவிட்டார் என்கிறார்கள்.
மேலும் தனது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, அதிமுகவை வாங்கு வாங்கு என வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையும் அதிமுகவுக்கு சிலர் ரிலே செய்துவிட்டார்களாம். இதனால் போயஸ் தோட்டத்தில் கோபம் அதிகமாகியுள்ளது.
மதிமுக தனக்கு திருப்பூர், விருதுநகர், தஞ்சை, ஆரணி, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய தொகுதிகளில் 5 தொகுதிகளைக் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிமுக தரத் தயாராக உள்ள தொகுதிகள் விருதுநகர், நீலகிரி, விழுப்புரம், மத்திய சென்னை ஆகிய 4 தொகுதிகள் ஆகும்.
இதில் மத்திய சென்னை வேண்டவே வேண்டாம் என்கிறது மதிமுக. அதற்குப் பதில் திருவள்ளூரைக் கேட்கிறது. அதே போல நீலகிரியும் வேண்டாம் என்று கூறும் மதிமுக பொள்ளாச்சியைக் கேட்டு அடம் பிடிக்கிறது.
ஜெவை சந்திக்க வராத வைகோ-வரதராஜன்:
நேற்று முன் தினம் காலை வைகோவும், வரதராஜனும் ஜெயலலிதாவை சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது. இதனால் அதிமுக வேட்பாளர் நேர்காணலை மாலைக்கு தள்ளி வைத்துவிட்டு ஜெயலலிதா காத்திருந்தார். ஆனால், இருவரும் ஜெயலலிதாவை சந்கிக்க வரவில்லை.
இந் நிலையில் இன்று ஜெயலலிதாவை சந்தித்து தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்துவிட்டார் வரதராஜன்.
அவசரமாய் கூடும் மதிமுக பொதுக் குழு:
இந் நிலையில் மதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை வரும் 8ம் தேதி அவசரமாகக் கூட்டியுள்ளார் வைகோ. தொகுதி உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் அதில் வைகோ வேறு முடிவை எடுப்பார் என்கிறார்கள்.
'அந்த' பத்திரி்க்கையாளரை சந்தித்தாரா வைகோ?:
இதற்கிடையே ஜெயலலிதா-பாஜகவுக்கு மிக நெருக்கமான 'ஓவர் புத்திசாலி' பத்திரிக்கையாளரை வைகோ சந்தித்து பிரச்சனையைத் தீர்க்க உதவியதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
இலங்கை விஷயத்தில் வைகோவை மிகக் கடுமையாக விமர்சிப்பவர் அந்த பத்திரிக்கையாளர்.
வெட்டி விடத் திட்டம்?:
இதற்கிடையே எதற்கும் ஜாதகம் பார்க்கும் ஜெயலலிதா, வைகோ விஷயத்திலும் அதைப் பார்த்துவிட்டு ஒதுக்குகிறாரோ என்ற சந்தேகமும் தங்களை வெட்டி விட திட்டமிடுகிறார்களோ என்ற அச்சமும் ஒரு பிரிவு மதிமுகவினரிடம் பரவியுள்ளது.
ஆனால், இதை மதிமுகவில் இன்னொரு தரப்பினரே மறுக்கின்றனர். நேரடியாகத்தான் பேச்சு நடத்தவில்லையே தவிர மறைமுகமாக பேச்சு தொடர்கிறது. வெகு சீக்கிரத்தில் சிக்கல் தீரும் என்கிறார்கள்.
மதிமுகவுக்கு விருதுநகர், பொள்ளாச்சி, காஞ்சீபுரம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளை அதிமுக தர முன் வரலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications