ராமநாதபுரம்: திமுகவின் 'ராமராஜன்' ரித்தீஷ்!
இவர் போய் எம்.பியா வேட்பாளரா என்று எல்லோருமே ஆச்சரியத்தில் விழி உயர்த்தும் அளவுக்கு இருக்கிறது ரித்தீஷின் நிலை. திமுகவுக்காக இவர் என்ன செய்தார், எந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார், எத்தன முறை சிறை சென்றார் என்று கேட்டால் ரித்தீஷிடமே கூட பதில் இருக்குமா என்று தெரியவில்லை.
அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரன். 2 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதுதான் ரித்தீஷ் குறித்து மக்களுக்கு இதுவரை தெரிந்த சமாச்சாரங்கள்.
இதைத் தாண்டி ரித்தீஷ் ஏதேனும் சாதனைப் பின்னணியோ, மக்களுக்காக பாடுபட்ட வரலாறோ வைத்திருக்கிறாரா என்றால் இல்லை என்ற பதில்தான் முதலில் வரும்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தென் மாவட்டங்களில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் நுழைந்து அதன் மூலம் கிராம மக்களிடம் தனது பெயரை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதிமுகவுக்கு 'பசு' நாயகன் ராமராஜன் என்றால், திமுகவுக்கு 'ஜல்லிக்கட்டு'க் காளை ரித்தீஷ்.
நடிகராக வருவதற்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழிலைக் கவனித்து வந்தார் ரித்தீஷ். சின்னி ஜெயந்த்தை இயக்குநராகப் போட்டு கானல் நீர் என்ற படத்தைத் தயாரித்து அவரே ஹீரோவாகவும் நடித்தார். பின்னர் நாயகன் என்ற படத்திலும் ஹீரோவாக தலை காட்டினார்.
முதல் படம் வெற்றிகரமாக ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களுக்கு தலைக்கு ரூ.100, பிரியாணிப் பொட்டலத்தைக் கொடுத்து மதுரை, ராமநாதபுரம் பகுதிகளை வியப்பில் ஆழ்த்திய சாதனையாளர்.
திமுகவில் பெரிய பொறுப்பு எதிலும் இல்லை. ராமநாதபுரம் நகர 23வது வார்டு பிரதிநிதியாக மட்டுமே இருக்கிறார்.
திமுகவில் வார்டு பிரதிநிதியாக இருக்கும் யாருக்குமே இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிப்பது கண்டிப்பாக சாத்தியமில்லாதது. ஆனால் தங்கவேலனின் பேரன், அமைச்ர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரின் சிபாரிசு மட்டுமே ரித்தீஷுக்கு சீட் வாங்கித் தந்திருக்க முடியும் என்று கருதப்படுகிறது.
தனக்கு சீட் நிச்சயம் கிடைக்கும் என்று கடந்த இரண்டாண்டு காலமாகவே தனது நண்பர்களிடம் கூறி வந்த ரித்தீஷ், இந்தத் தொகுதியில் ஒரு பொது விழாவைக் கூட விட்டதி்ல்லை. கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் நேரில் ஆஜராகி லட்சங்களை இறைத்திருக்கிறார்.
இதனால் இவருக்கென்று ஒரு ஆதரவுப் படையே உருவாகியிருக்கிறது. என்றாலும் கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேர் இருக்க இப்படி திடீரென்று குதித்த ரித்தீஷை வேட்பாளராக ஏற்க திமுகவினரிலேயே எத்தனை பேர் தயாராக இருப்பார்கள் என்று தெரியவில்லை.
இங்கே அதிமுக பலமாக கேண்டிடேட்டைப் போட்டால் திமுகவின் நிலைமை பரிதாபமாகலாம்.