'அரசியல் கட்சிகள் கிறிஸ்தவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்'
சென்னை: தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள், கிறிஸ்தவர்களுக்கு அதிக சீட்களை ஒதுக்கி அவர்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தர வேண்டும் என கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை கூறுகையில், மதச்சார்பின்மையை பின்பற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் கிறிஸ்தவர்களுக்கு தேர்தலில் அதிக வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்கள், திமுக, தலைமையிலான கூட்டணியை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார்கள். எனவே இக்கூட்டணியில் கிறிஸ்தவர்களுக்கு அதிக சீட்கள் தர வேண்டும் என விரும்புகிறோம்.
எங்களது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய, எங்களது கருத்துக்களை எடுத்து வைக்கக் கூடிய வகையில் கிறிஸ்தவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்.
இதுதொடர்பாக மார்ச் 31ம் தேதி முதல்வர் கருணாநிதியை மதுரை ஆர்ச்பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமையிலான கிறிஸ்தவ குழுவினர் சந்தித்தபோது நேரிலும் எடுத்து வைத்தோம்.
அதை கனிவுடன் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்திருந்தார். அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக உள்ளன. எனவே எங்களது கோரிக்கைக்கு இதுவே சரியான நேரமாகும் என்றார்.
அதேபோல கத்தோலிக்க கிறிஸ்தவ வார இதழான நம் வாழ்வு- இதழின் ஆசிரியர் மதுரை ஆனந்த் கூறுகையில், கடந்த நாடாளுமன்றத்தில் தமிழகத்திலிருந்து 2 கிறிஸ்தவ எம்.பிக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல 234 சட்டசபைத் தொகுதிகளில் 9ல் மட்டுமே கிறிஸ்தவர்கள் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றனர்.
மதச் சிறுபான்மையினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார்கள். அதை மாற்ற வேண்டும். கிறிஸ்தவர்களுக்கும் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். சிறுபான்மையினரின் வாக்குகளை பயன்படுத்தி வரும் கட்சிகள் இதைச் செய்ய முன்வர வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications