'உள்குத்து' இருக்காது-காங்.க்கு திருமா தந்த நிம்மதி!
சென்னை: திமுக அணியில் இருந்து கொண்டு காங்கிரசுக்கு எதிரான 'கீழறுப்பு' வேலைகளில் ஈடுபட மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த 2006ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இருந்து இடம் பெற்று வருகிறது. ஈழத் தமிழர் சிக்கல்களையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் திமுக அணியில் தொடர்கிறதா? இல்லையா? என்கிற கேள்வி எழுகிறது.
இந்நிலையில் கடந்த 16ம் நாள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விடுதலைச் சிறுத்தைகள் திமுக அணியிலே தொடர்கிறது என்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திமுகவுக்குமான கூட்டணி, கொள்கை கூட்டணி என்றும் முதல்வர் கருணாநிதி அறிவிப்புச் செய்தார்.
இதைத் தொடர்ந்து திமுகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அதன்படி விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் அதே கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியோடு விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள்ள நட்புறவுத் தொடர்பாக பல்வேறு ஐயங்களும் கேள்விகளும் எழுந்தன. கூட்டணியின் நலன் கருதியும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கட்சியின் நலன் கருதியும் கடந்த கால கசப்பான அனுபவங்களை முன்னிறுத்தி பார்க்காமல் கூட்டணி தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையே முதன்மையான கடமையாக விடுதலைச் சிறுத்தைகள் உணர்கிறது.
அந்த அடிப்படையில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பாடுபடும். கொள்கை முரண்பாடு உள்ள கட்சிகள் தேர்தல் கூட்டணியில் இடம் பெறக்கூடாது என்றால் இந்தியாவில் யாரும் யாரோடும் கூட்டணி வைக்க முடியாது.
அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், காங்கிரசும் தமக்கிடையேயான கசப்பான அனுபவங்களை பின்னுக்கு தள்ளி கூட்டணி தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்பதோடு ஐயங்களுக்கு இடம் தராத வகையில் செயல்பட வேண்டியுள்ளது.
ஆகவே ஓரணியில் இருந்து கொண்டே கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுவதும் துரோகம் இழைப்பதும் நாகரிகமான அரசியல் அணுகுமுறையாக அமையாது. எனவே விடுதலைச் சிறுத்தைகள் அத்தகைய அணுகுமுறையை கையாளாது.
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்ய மாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் அறிவித்ததாக ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இது திமுக கூட்டணியில் குழப்பத்தையும், ஒரு பின்னடைவையும் ஏற்படுத்திட வேண்டும் என்றே திட்டமிட்டு பரப்பப்படுகின்றன உண்மைக்கு மாறான தகவலாகும்.
காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே “எதிர்த்து பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்று சொன்ன செய்தியை திரித்து எழுதி தமது உள்நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆகவே விடுதலைச் சிறுத்தைகள் இத்தகைய செய்திகளை பொருட்படுத்த வேண்டாம்.
விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறும் அணி மகத்தான வெற்றிபெறும் என்கிற வரலாற்றுப் பதிவை உருவாக்கிடும் முனைப்போடும் விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வொரு வரும் களப்பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.