வைகோ மீது நடவடிக்கை கோரி போலீசி்ல் சிவசேனா புகார்!
நாகூர்: தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவசேனா கட்சி நாகூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.
சிவசேனா கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க முத்துக்கிருஷ்ணன் நாகூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,
நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் உயிரைவிடவும் மேலாக நேசிப்பவன் நான்.
கடந்த 8-ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், இலங்கையில் தமிழர்களை அழித்தால் இந்தியா என்ற தேசம் இருக்கப் போவதில்லை என்றும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் கூட தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று பேசியுள்ளார்.
இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரித்து தனிநடாக ஆக்கும் பேச்சாக அவரது பேச்சு அமைந்துள்ளது.
எனவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இந்த பேச்சு தமிழகத்தில் அமைதியை கெடுப்பதுடன் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக உள்ளது.
எனவே அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.