மினி லாரி மோதி 25 ஆடுகள் பலி-ஒருவர் படுகாயம்
சுசீந்திரம்: சுசீந்திரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆடுகள் மீது மினி லாரி ஒன்று மோதியதில் 25 ஆடுகள் பலியாகின. ஆடுகளை ஓட்டி சென்றவர் படுகாயம் அடைந்தார்.
ராதாபுரம் அருகேயுள்ள உதயத்தூர் ஊரை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ராதாபுரத்திலிருந்து மேய்யச்சலுக்கு ஏற்றப்பகுதியான சுசீந்திரம் பகுதிக்கு 400 செம்மறி ஆடுகளுடன் வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருவதால், சுடலையாண்டி ஆடுகளுடன் ஊருக்கு திரும்ப முடிவு செய்தார்.
இதையடுத்து சுசீந்திரம் மெயின் ரோடு வழியாக காலை 5 மணிக்கு ஆட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பக்கம் வந்த மினி லாரி ஒன்று ஆட்டு மந்தைக்குள் புகுந்தது. பின்னர் சுடலையாண்டியையும் இடித்து சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே 25 செம்மறி ஆடுகள் பலியாகின. எட்டு ஆடுகள் படுகாயம் அடைந்தன.
சுடலையாண்டி உயிருக்கு ஆபத்தான நிலையில ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் ரோடுகள் முழுவதும் சிதறி கிடந்த ஆடுகளின் உருப்புகளாலும், ரத்த சிதறல்களாலும் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆட்டு மந்தைக்குள் புகுந்த நாசம் செய்த மினி லாரி மாயமானது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.