ஜெட் ஏர்வேஸில் 500 ஊழியர் நீக்கம்
மும்பை: ஜெட் ஏர்வேஸ் தனது 500 பணியாளர்களை நீக்குகிறது.
பயணிகள் குறைவு மற்றும் லாபம் குறைவு காரணமாக அடுத்து என்ன செய்வது என்று ஹைதராபாதில் நேற்று கூடிப் பேசினர் அனைத்து விமான நிறுவனங்கள் தலைமை செயல் அலுவலர்கள்.
இக் கூட்டத்துக்குப் பின்னர், தங்களின் இந்த முடிவை அறிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ்.
இப்போது நீக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் கேபின் எஞ்ஜினீயர்களே. இவர்களுக்கு 30 நாள் ஊதியத்துடன் பணி நீக்க ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் சில அலுவலகங்கையும் மூடிவிட ஜெட் முடிவு செய்துள்ளது.
மோசமான நிதி நெருக்கடியிலிருந்து நிறுவனத்தைக் காக்க தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெட் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல், பணி நிரந்தரம் பெறாத ஊழியர் மட்டுமே இதுபோல நீக்கப்படுவதாகவும், பணி நிரந்தரம் பெற்றவர்கள் யாரும் நீக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சென்னை - துபாய் தினசரி ஜெட்!:
இந் நிலையில் இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனம் ஜெட், சென்னை - துபாய் மார்க்கத்தில் தினசரி விமான சேவையைத் துவங்குகிறது.
ஏப்ரல் 23-ம் தேதி முதல் இந்த விமானம் இயக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த நிறுவனம் மும்பை - துபாய் மார்க்கத்தில் விமானம் இயக்கி வருகிறது.
சென்னை - துபாய் விமானம் முழுக்க முழுக்க சொகுசு வசதிகள் கொண்டதாகும். ஒவ்வொரு இருக்கையும் மிகவும் சொகுசாகவும் வீடியோ, ஆடியோ வசதிகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது என ஜெட் ஏர்வேஸ் உதவி பொது மேலாளர் ஜோசப் ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.
'இந்த விமானம் விரைவிலேயே பயணிகளின் அபிமானத்துக்குரியதாக மாறிவிடும். இதுபோன்ற சொகுசு விமானங்களை நிறைய இயக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications