தேர்தல் கணிப்பு-ஜோதிடர்களுக்கும் ஆணையம் தடை!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கணிப்புகளை வெளியிட ஜோதிடர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து கட்டமாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஆரம்பித்துவிட்ட நிலையில் கருத்துக் கணிப்புகள், எக்சிட் போல் எனப்படும் வாக்குக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடைசி கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.
இந் நிலையில் ஜோதிடர்கள் தங்களது கணிப்புகளை வெளியிடலாமா என்ற சந்தேகம் நிலவியது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அளித்துள்ள பேட்டியில்,
கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஜோதிடர்களும், தேர்தல் தொடர்பான கணிப்புகளை வெளியிடக்கூடாது. ஜோதிடர்கள் தேர்தல் ஆரூடம் கூற நேற்று முதல் கடைசி கட்ட வாக்குப் பதிவு வரை தடை உள்ளது என்றார்.
டீயை மறுத்த நரேஷ் குப்தா:
ஒருவர் இந்த அளவுக்கு நல்லவராக இருக்க முடியுமா என்று யாருக்காவது ஆச்சரியம் ஏற்பட்டால் அவர்கள் நரேஷ் குப்தாவை பார்த்து தங்களது ஆச்சரியத்தை டபுள் ஆக்கிக் கொள்ளலாம்.
நேர்மைக்குப் பெயர் போனவர் நரேஷ்குப்தா. அவரை திட்டாத அரசியல்வாதிகளே கிடையாது என்ற அளவுக்கு நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டவர் இவராகத்தான் இருக்க முடியும்.
சமீபத்தில் நரேஷ் குப்தாவை முதல்வர் கருணாநிதி கடுமையாக விமர்சித்ததை அனைவரும் அறிவர். இவரது உடம்புதான் வளைந்தபடி இருக்கிறதே தவிர இவர் யாருக்கும் வளைந்து கொடுத்ததில்லை.
இவரது உடல் பலத்தை விட தைரியத்தின் வலு ரொம்ப அதிகம். படு தில்லாக செயல்பட்டு வரும் நரேஷ் குப்தா இன்று சென்னை அரசு மருத்துவமனையை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார்.
இன்று காலை நரேஷ் குப்தா, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார். அவரை டாக்டர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் டீன் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார்.
வந்தவருக்கு ஏதாவது கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற நல்ல பழக்கத்தின் அடிப்படையில், டீயும், பிஸ்கட்டும் கொண்டு வந்து நரேஷ் குப்தாவுக்குக் கொடுத்தனர்.
ஆனால் மிக்க நன்றி, வேண்டாம் என்று சிம்பிளாக கூறி டீயையும், பிஸ்கட்டையும் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார் நரேஷ் குப்தா. இதைப் பார்த்து டீன் உள்பட டாக்டர்களுக்கு ஆச்சரியமாகப் போய் விட்டதாம்.
அதன் பின்னர் நரேஷ் குப்தாவுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்த நரேஷ் குப்தா அதன் பின்னர் அங்கிருந்து சென்றார்.
சமீபத்தில்தான் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, வாக்குச் சாவடிகளில் வீடியோ படம் எடுக்க நியமிக்கப்படும் வீடியோகிராபர்கள், அரசியல் கட்சியினரோ அல்லது பிறரோ தரும் டீ, காபி, பிஸ்கட் போன்றவற்றை வாங்கி சாப்பிடக் கூடாது என கூறப்பட்டிருந்தது.
தனது அலுவலகம் போட்ட உத்தரவை படு சிரத்தையாக நரேஷ்குப்தா கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.