இலங்கை அமைச்சர் மகளுக்கு மருத்துவ சீட் வாங்கித் தந்த 'ரா'!- உளவாளியுடன் சண்டையால் படிப்பு பாதிப்பு!!
அவுட்லுக் இதழ் இது தொடர்பான ரகசிய பேரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
உளவாளி ரவி நாயர்..
அமைச்சர் ரோகித பொகல்லகாமாவின் மகள் மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்காக இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் அனுமதியைப் பெற்றுள்ளார். இதற்கு ரா பெரும் உதவி புரிந்துள்ளது.
அதேசமயம், கொழும்பிலிருந்து செயல்பட்டு வந்த ரா உளவு அமைப்பைச் சேர்ந்த உளவாளிக்கும், ரோகித பொகல்லகாமாவுக்கும் இடையே திடீர் பிரச்சினை ஏற்பட்டதால், அது அவருடைய மகளின் படிப்பையே பாதிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.
கொழும்பிலிருந்து செயல்பட்டு வந்த அந்த உளவாளியின் பெயர் ரவி நாயர். இவருக்கு தனது கொழும்பு இல்லத்தையே வாடகைக்கு விட்டிருந்தார் ரோகித.
பணம் கட்டுவதில் பஞ்சாயத்து..
இந்த நிலையில் வீட்டுக்குத் தேவையான பல விலை உயர்ந்த பொருட்களை ரவி நாயர் வாங்கியுள்ளார். ஆனால் அதற்கான பணத்தை யார் கொடுப்பது என்பதில் இருவருக்கும் இடையே மோதல் மூண்டதாம்.
இதனால் கோபமடைந்த ரோகித, தனது கோபத்தை நேரடியாக ரவி நாயரிடம் காட்ட முடியாமல், சீன உளவு அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன் ரவிக்கு தொடர்பு இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இதனால் ரவி நாயரை இந்திய அரசு திரும்ப அழைத்துக் கொண்டது. அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் ரோகித கூறிய செய்தியில் உண்மை இல்லை என்று தெரிய வந்ததாம்.
ரோகிதவின் செயலால் கடுப்பான ரா, அவரது மகள் படிப்புக்கு இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவரால் தொடர்ந்து படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.