இலங்கைக்கு இறுதி கெடு விதிக்க கருணாநிதி கோரிக்கை

இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாவிட்டால் அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் பிரதமர் உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அடித்தார்.
இந்த நிலையில் இன்று இன்னொரு தந்தி அடித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது...
இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது.
ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இலங்கை அரசை உடனே போரை நிறுத்தும்படி வற்புறுத்தி உள்ளனர்.
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தும்படியும், நிரந்தர போர் நிறுத்தம் செய்யும்படியும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இலங்கை அரசுக்கு இறுதி கெடு விதிக்க வேண்டும்.
லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை..
கேள்வி: பெண்கள் அமைப்பு ஒன்றின் சார்பில் மதிமுக அலுவலகத்திற்குள் சிலர் உண்ணாவிரதம் இருப்பதைப்பற்றி டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில் திமுக அரசு இரக்கமின்றி அசைந்து கொடுக்காமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: தோழமைக்கட்சியாக அவர் இருந்தபோதே அன்றாடம் திமுக அரசு மீது குறை கூறுவதில் அலாதி இன்பம் கண்டு வந்தார். இப்போது கேட்கவா வேண்டும். ஒருநாள் உண்ணாவிரதம் முடிந்த நிலையில் காவல் துறையினர் அவர்களிடம் சென்று தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டாம் என்று கூறினார்கள். அதன்பிறகு அவர்களது உண்ணாவிரத போராட்டம் மதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குள் மாற்றிக்கொள்ளப்பட்டது.
உண்ணாவிரதம் இருக்கும் அமைப்பினர் தங்கபாலுவை சந்திக்க விரும்பியபோது, அவர் பிரசாரப் பணிகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு அலுவலகத்திலே காத்துக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் வரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்றதாகவும், அப்போது அவரது பேச்சுக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலையை எடுத்துரைக்கும் வகையில் இருந்ததால், அவரை திருப்பி அனுப்பி விட்டதாகவும் "தினமணி'' நாளிதழிலே கூறப்பட்டுள்ளது.
நான் மாநிலங்களவை உறுப்பினர், கனிமொழியை பெண்கள் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு அனுப்பி- உண்ணாவிரதத்தை அவர்கள் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளச் செய்தேன். அதற்கு உண்ணாவிரதம் இருந்த பெண்கள், முதல்வர் அறிவித்ததைப் போல இலங்கையில் உள்ள தூதரக தொடர்புகளை இந்திய அரசு ரத்து செய்வதாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமிருந்து உறுதிமொழி வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.
அதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவி, சோனியா காந்தியிடம் பேசுவதாகவும், போர் நிறுத்தம் பற்றி உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் நான் தெரிவித்து, என் வேண்டுகோளுக்கு இணங்கி உண்ணாவிரதம் இருக்கின்ற சகோதரிகள் உடனடியாக அதை கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications