போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இரு்த 5 பெண்கள் கைது
இதனால் சற்றும் மனம் தளராமல் உண்ணாவிரதத்தை இன்று 10வது நாளாக தொடர்ந்து வருகிறார்கள் பெண்கள் கூட்டமைப்பினர்.
ஈழப் போருக்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர்.
அவர்களை பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் சந்தித்து ஆறுதலும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
இன்று 10வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. உண்ணாவிரதத்தில் இருக்கும் பல பெண்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.
இவர்களில் 5 பேரின் நிலை மிகவும் மோசமானது.இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் போலீஸார் திடீரெனக் கைது செய்தனர். இன்று அதிகாலை ஐந்தே முக்கால் மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களை வேனில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கு தற்போது கைது செய்யப்பட்ட ஜெயமணி, சுமதி, சித்ரா தேவி, தங்கமணி, லோகநாயகி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் பிற பெண்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.