'அன்பு சகோதரர்' வைகோவை நெளிய வைத்த ஜெ!
சிவகாசி: விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்காக சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவின் பெயரை ஒரே ஒரு முறை மட்டுமே சொன்னார்.
வைகோவுக்காக ஓட்டு கேட்க வந்தபோதும்கூட, வைகோவை மேடையில் (நிற்க) வைத்துக் கொண்டே அவரது பெயரை ஒரு முறைக்கு மேல் உச்சரிக்காமல் தனது ஒரு மணி நேர உரையை அவர் முடித்தார்.
அதுவும் வைகோவுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட கேட்கவில்லை. மாறாக முதல்வர் கருணாநிதியைத் தாக்கிப் பேசுகையில் மட்டும் மறந்து போயோ என்னவோ வைகோவின் பெயரைச் சொல்லிவிட்டார்.
வழக்கமாக அன்புச் சகோதரர் என்று வைகோவை ஜெயலலிதா கூறுவார். ஆனால், இம்முறை பெயரையே சொல்லாமல் தவிர்த்தார்.
ஆனாலும் பெயரைச் சொல்வார் என்று மதிமுக தொண்டர்களும், ஏன் வைகோவும் கூட எதிர்பார்ப்புடன் இருக்க, அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்விட்டு ஜெயலலிதா பேச்சை முடித்தபோது மேடையில் இருந்த 'அன்பு சகோதரர்' நெளிந்து கொண்டிருந்தார்.
இதனால் இந்தக் கூட்டணி வாக்குப் பதிவுக்கு மறுநாள் நீடிக்குமா என்பது சந்தேகமே.
ஜெயலலிதா பேசியதாவது...
அந்தப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: மத்தியில் ஆட்சியில் உள்ள திமுக அங்கம் வசிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு உங்களுக்கு என்ன நன்மை செய்தது?. காங்கிரசும் திமுகவும் இணைந்த மத்திய அரசால் நீங்கள் அடைந்த பயன் என்ன?.
பொருளாதார சீரழிவு, அதிகரித்து வரும் தீவிரவாதம் விவசாயிகள் தற்கொலை, நதி நீர் பங்கீட்டில் பாரபட்சம், வேலை இல்லாத் திண்டாட்டம், தொழில் வளர்ச்சி கடும் பாதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவைதான் இந்த மத்திய அரசு உங்களுக்கு வழங்கிய பரிசு.
மத்திய அரசின் நிர்வாக திறமையின்மையும் அலட்சிய போக்கும்தான் இதற்கு காரணம். திமுக அரசு மின்சாரத்துக்கு விடுமுறை அளித்தும், மணல் கொள்ளை மூலமும் தமிழகத்தை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மத்தியில் திமுக அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து துறையிலும் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால் அவர்களை பிரதமர் தண்டிக்கவில்லை.
பிரதமரால் தண்டிக்க முடியாத அமைச்சர்களை உங்களால்தான் தண்டிக்க முடியும். அதை நீங்கள் செய்வீர்களா? (செய்வோம்..செய்வோம்.. என கூட்டம் பதில் தந்தது).
நாட்டைக் காப்பாற்ற ஊழல் குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள். வாக்காளர்களை காசு கொடுத்து வாங்கி விடலாம் என்பது திமுகவின் தேர்தல் திட்டம். திருமங்கலத்தில் கள்ள ஓட்டு போட்டதுபோல் தமிழகம் முழுவதும் விளையாடலாம் என்று நினைக்கிறார்கள். இதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நேர்மையான ஆட்சி அமைய அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
வைகோ சொத்து விவரம்...
இதற்கிடையே தனது வேட்பு மனுவுடன் வைகோ தாக்கல் செய்துள்ள சொத்து விவரம்:
என்னிடம் ரொக்கம் ரூ.25,000, மனைவி ரேணுகா தேவியிடம் ரொக்கம் ரூ.15,000, எனது பெயரில் டெல்லி ஸ்டேட் வங்கி கணக்கில்ல் ரூ.18,803, கலிங்கப்பட்டி கனரா வங்கி கிளையில் ரூ.760.40, சங்கரன்கோவில் இந்தியன் வங்கி கிளையில் ரூ.10,000, சென்னை எச்.டி.எப்.சி. வங்கிக் கிளையில் ரூ.20,000,
மனைவி ரேணுகாதேவி பெயரில் சென்னை எச்.டி.எப்.சி. வங்கியில் ரூ.18,504, இதே வங்கியின் மற்றொரு சேமிப்பு கணக்கில் மனைவி பெயரில் ரூ.10,190, சென்னை தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் மனைவி பெயரில் ரூ.8,000.
மனைவியிடம் ரூ.9.57 லட்சம் மதிப்புள்ள 93 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.85,000 மதிப்பிலான வைர நகை.
நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் எனது பெயரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம், மனைவி பெயரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 9.14 ஏக்கர் நிலம்.
சென்னை சைதாப்பேட்டையில் என் பெயரில் ரூ.16.80 லட்சம் மதிப்புள்ள நிலம், மனைவி பெயரில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள நிலம்.
நெல்லை குலவணிகர்புரத்தில் மனைவி பெயரில் ரூ.57.55 லட்சம் மதிப்புள்ள 33 சென்ட் நிலம்.
சங்கரன்கோவில் தாலுகா கோபாலகிருஷ்ணபுரத்தில் எனது பெயரில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் 1000 சதுர அடியில் கட்டிடம், கலிங்கப்பட்டியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீடு.
சென்னை அண்ணா நகரில் மனைவி ரேணுகாதேவி பெயரில் ரூ.1.1 கோடி மதிப்பில் வீடு உள்ளது என்று கூறியுள்ளார் வைகோ.
கார்த்திக்....
அதே போல கார்த்திக் தன்னிடம் ரூ.33.7 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், ரூ.5.6 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளதாகக் கூறியுள்ளார்.