கவனத்தை திசை திருப்பவே உண்ணாவிரதம்-சோ
சென்னை: தனி ஈழம் அமைப்போம் என்று ஜெயலலிதா கூறிதும் மீடியாக்களின் கவனம் அவர் பக்கம் திரும்பி விட்டதால், அதை திசை திருப்ப உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார் கருணாநிதி என துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கூறியுள்ளார்.
கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தபோது சோ கூறுகையில், ஜெயலலிதாவுக்கு தமிழ் ஈழ அறிவிப்பைத் தொடர்ந்து மீடியா வெளிச்சம் கிடைத்ததைப் போல தனக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
மீடியா கவனத்தைப் பெறுவதுதான் இதன் நோக்கம். வேறு காரணம் எதுவும் இல்லை.
அவருக்கு அவரே முரண்பாடாகி விட்டார். இந்த உண்ணாவிரதத்தை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றார் சோ.
உண்ணாவிரதம் முடித்த பிறகு சோ கூறுகையில், இலங்கை அரசு போரை நிறுத்தி பல நாட்களாகிவிட்டது. கடந்த சில நாட்களாக அவர்கள் மக்களை மீட்பதிலும் நிவாரணம் வழங்குவதிலும் தான் கவனம் செலுத்தி வந்தனர் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் இலங்கை விவகாரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இப்போதுள்ள நிலையில் கருணாநிதியின் குடும்ப அரசியலால் தமிழகத்தில் அதிமுக 40 இடங்களிலும் வென்றிருக்கும். ஆனால், விஜய்காந்த் திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதால் அது திமுகவுக்கு கொஞ்சம் சாதகமாகும் என்றார்.