காங்.கை எதிர்த்து களமிறங்கும் சீமான்!
புதுச்சேரி: மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொள்வேன் என்று இயக்குநர் சீமான் அறிவித்துள்ளார்.
புதுவை மற்றும் நெல்லையில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதானார் இயக்குநர் சீமான். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் புதுச்சேரி வழக்கிலும் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.
விடுதலையான கையோடு அரியாங்குப்பம் வந்த சீமானுக்கு பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த விடுதலை கருத்து சுதந்திரத்துக்குக் கிடைத்த விடுதலை என்பேன். இங்கே தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆதரித்து பேசக்கூடாது என்ற சர்வாதிகாரம் இருந்தது. அதை எனது வழக்கு உடைத்தெறிந்துள்ளது. எங்களுக்கு கிடைக்க வேண்டியது விடுதலை. அது கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
ஈழ விடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். தமிழீழத்தை ஆதரிக்கும் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்போம். இதற்காக பலபேர் பல வடிவத்தில் போராடுகிறார்கள். 13 பேர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர்.
காங்கிரஸ்தான் இந்த இனப்பேரழிவுக்கு காரணம். காங்கிரசை வீழ்த்தும் வரை போராடுவோம். அது யாருக்கு சாதகம், பாதகம் என்றெல்லாம் பார்க்கமாட்டோம்.
மே1-ந் தேதிக்கு பின்னர் என்னைக் கைது செய்த இடத்திலிருந்தே பிரசாரம் தொடங்குவேன், என்றார் சீமான்.
எம்ஜிஆர்தான் உண்மையான தமிழினத் தலைவன்!
பின்னர் மாலையில் ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியது:
சிறைக்குப் போனதில் எனக்கு வருத்தமில்லை. உண்மையான நல்லவர்களைத் தெரிந்து கொள்ள உதவியது சிறைதான்.
இப்போது சொல்கிறேன், எம்.ஜி.ஆர்.தான் உண்மையான தமிழ் இனத் தலைவன், தமிழ் இனத்துக்காக பாடுபட்டவர். தமிழ் நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர். என்றால், தமிழ் ஈழத்துக்கு ஒரு பிரபாகரன். இப்படி பேசுவதால் என்னை யாரும் கைதுசெய்ய முடியாது. இந்த முறை கைது செய்தால் தேர்தலில் தோற்றுப் போய்விடுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications