பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்-ரெஜினா பாப்பா
இந்தியாவின் சக்தி வாய்ந்த அமைச்சர்களி்ல் ஒருவர் ப.சிதம்பரம். மறுபக்கம், அரசியல்ரீதியாக சக்தி வாய்ந்த பிரமுகர்களில் ஒருவர் ராஜ கண்ணப்பன்.
பாராம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சியான அதிமுகவும் புஜ பலம் காட்டும் நிலையிலும், அதுகுறித்து பயமோ, வெற்றி குறித்த சந்தேகமோ சற்றும் இல்லாமல், இவ்விரு கட்சிகளுக்கும் ஈடு கொடுத்து பிரசாரக் களத்தை கலக்கி வருகிறார் தேமுதிகவின் ரெஜினா பாப்பா.
சிறந்த கல்வியாளர், சமூக சேவகர் என பன்முகம் கொண்டவர் ரெஜினா பாப்பா.
தீவிரப் பிரசாரத்தில் இருந்த ரெஜினா பாப்பாவை, தட்ஸ்தமிழுக்காக சிறப்பு பேட்டி கண்டார் நமது செய்தியாளர் கே.என்.வடிவேல்:
கேள்வி - அரசியலுக்கு நீங்கள் வந்தன் நோக்கம் என்ன?
ரெஜினா - சமூகம் குறித்த அழமான சிந்தனை எனக்கு உண்டு. அரசியலில் நேர்மை, வாய்மை, தர்மம் இல்லை. அதர்மம் தலைவிரித்து ஆடுகின்றது. எனவே புதிய அரசியல் தர்மத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.
அதர்மத்தை வீழ்த்தி தர்மத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது எனது லட்சியம். அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் சென்று விட்டால் அதை யார் தான் தூய்மைப்படுத்துவது. அதனால் தான் அரசியலை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வந்துள்ளேன்.
கேள்வி - பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று உங்கள் பிரச்சாரத்தில் பேசுகின்றீர்கள். பெண்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?
ரெஜினா - பெண்கள் அரசியலுக்கு வந்தால் தான் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படும். மாற்றம் ஏற்படும்.
நாட்டில் உள்ள வறுமையையும், ஏழ்மையயையும் அரசால் ஒழிக்க முடியவில்லை. அதே போன்று என்ஜிஓ -க்களால் கூட முடியவில்லை.
நல்ல சமுதாயத்தை உருவாக்க முயன்று வரும் அரசு அதிகாரிகள் கூட மோசமான அரசியல்வாதிகள் கைகளில் சிக்கி தவிக்கின்றனர். அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இதுவரை சிங்கிள் டிஜிட்டில் மட்டும் சீட் ஒதுக்கி வருகின்றனர். இரட்டை டிஜிட்டில் கூட இல்லை. அந்த நிலை மாற வேண்டும்.
பெண்கள் அரசியலுக்கு வந்தால் தான் நாடும், வீடும் முன்னேறும். சமுதாயத்தில் விழுப்புணர்வு வரும். அதற்கு ஒரு எடுத்துக் காட்டு தான் நான்.
கேள்வி - மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிடுகின்றீர்கள். உங்கள் மன நிலை எப்படி உள்ளது?
ரெஜினா - அது தான் என்னை உற்சாகப்படுத்துகின்றது. அசாத்திய தைரியம், மன தைரியம், புத்தி கூர்மை போன்றவற்றை பயன்படுத்தி இதை சவாலாக எடுத்துக் கொள்வேன். நான் மக்களை நம்பியுள்ளேன். அவர்கள் என்னை நம்பி வருகின்றனர். அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வேன்.
தற்போது மவுனப்புரட்சி நடைபெறுகின்றது. அதன் அர்த்தம் தேர்தலில் வெளிப்படும். அதை நீங்கள் மட்டும் அல்ல எலோரும் உணர்வீர்கள்.
கேள்வி - உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
ரெஜினா - எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆண்களும் பெண்களும் எனது பிரச்சராத்தில் திரண்டு வருகின்றனர். அவர்கள் கண்களில் ஒரு வித ஏக்கம் தெரிக்கின்றது. அவர்களிடம் ஒரு வித எழுச்சி தெரிகின்றது. அந்த எழுச்சியே என்னை வெற்றி பெற வைத்துவிடும்.
கேள்வி - தேர்தலை பற்றி உங்ள் அபிப்ராயம் என்ன?
ரெஜினா - தேர்தலில் ஜனநாயம் இருக்க வேண்டும். பணநாயகத்தை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அமைச்சர்கள் தங்களது பதவியை வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்.
தேர்தலில் எல்லாரும் போல் அவர்களும் சாதாரண குடி மகனாக போட்டியிட வேண்டு்ம். அது தான் உண்மையான தேர்தல். தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா மட்டும் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று நினைத்தால் போதாது. அது கடை நிலை ஊழியர் வரை வர வேண்டும். அப்போது தான் அதை ஜனநாயக தேர்தலாக ஏற்றுக் கொள்ளமுடியும் என்றார் ரெஜினா.
மாற்றம் வேண்டும், மக்கள் மாற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி வருகிறார். அவரது வார்த்தைகளை ரெஜின பாப்பாவின் நம்பிக்கையுடன் கூடிய பிரசாரம் பளிச்சென பிரதிபலிக்கிறது.