அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட 'ஸ்ட்ரிக்ட்' ஆர்டர்...கோட்டையை உலுக்கும் 'அசிஸ்டென்ட்' விவகாரம்!
சென்னை: "அமைச்சர்களின் ஆபீஸ்கள்ல ஜாதியோட நிழல்கூட படியக் கூடாது. உதவியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஜாதி, மதம், சொந்த பந்தம்னு எந்தப் பாசமும் பார்க்கக் கூடாது. தகுதி மட்டும்தான் ஒரே தாரக மந்திரம்!"... கோட்டை வட்டாரத்திலிருந்து கசிந்திருக்கும் இந்த ஒற்றை உத்தரவுதான், இப்போதைய ஹாட் டாபிக். தன் டீமில் இருக்கும் அமைச்சர்களுக்கு அக்மார்க் 'நோ காம்ப்ரமைஸ்' பாணியில் செக் வைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.

என்ன பின்னணி?
தமிழகத்தின் 41 அரசுத் துறைகளை வழிநடத்த, முதல்வர் விஜய் தலைமையில் 34 அமைச்சர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். இம்முறை கூட்டணிக் கணக்குகளும் கச்சிதமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. காங்கிரஸுக்கு இரண்டு, வி.சி.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் எனப் பிரதிநிதித்துவங்கள் பங்குவைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் சவாரி செய்யத் தயாராகிவிட்ட நிலையில், அவர்களுக்கான 'டீம்' அமைக்கும் வேலைகள் பின்னணியில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஆபீஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் மற்றும் சீனியர் அசிஸ்டென்ட்டுகள், ஸ்பெஷல் ஆபீஸர்கள், டிரைவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், தபேதார்கள், செக்யூரிட்டி போலீஸ் என ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு தனிப் பட்டாளமே தேவைப்படும். மாநிலம் முழுக்க இப்படி மொத்தம் 400-க்கும் மேற்பட்ட பவர்ஃபுல் போஸ்டிங்குகளில் ஆட்களை நியமிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பழைய ஃபார்முலாவுக்கு முற்றுப்புள்ளி!
வழக்கமாக, அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது ஒரு எழுதப்படாத 'ஃபார்முலா' பின்பற்றப்படும். 'நம்ம ஆளு', 'நம்ம சொந்தக்காரர்', 'நம்ம சமூகத்தைச் சேர்ந்தவர்' என்கிற வட்டாரப் பாசத்தில், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கே பல அமைச்சர்கள் சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள். நிர்வாக ரகசியங்கள் வெளியே கசிந்துவிடக் கூடாது என்கிற பாதுகாப்பு உணர்வும் இதற்கு ஒரு காரணம்.
ஆனால், இந்த பழைய பாணியை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கிறார் முதல்வர் விஜய். "நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மிக முக்கியம். ஜாதிய அடையாளங்களையோ, உறவுமுறைப் பாசத்தையோ காட்டி தகுதியற்றவர்களைப் பக்கத்தில் அமர வைக்கக் கூடாது" என கட் அண்ட் ரைட்டாகப் பேசியிருக்கிறார்.
இது போக இன்னொரு பக்கம் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தரப்பிலிருந்து மிக முக்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிரடியான ரகசியத் தகவல் (Unofficial Order) ஒன்று நேரடியாகக் கடத்தப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து முதல்வர் அனுப்பியுள்ள இந்த அதிரடித் தகவல், ஐஏஎஸ் வட்டாரத்தை கவனிக்க வைத்துள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் பெரும்பாலானோர் அரசு நிர்வாகத்திற்கு முற்றிலும் புதியவர்கள். கோப்புகளை எப்படிக் கையாள்வது, திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது என்பதில் அவர்களுக்குப் போதிய கள அனுபவமில்லை. இதனால் ஆட்சித் தொடக்கத்திலேயே நிர்வாகத்தில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் முதல்வர் விஜய் மிகத் தீவிரமாக இருக்கிறார். இதைக் கருத்தில் கொண்டே, அதிகாரிகளுக்கு இந்த ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கசிந்த ரகசியத் தகவல்: "துறைகளை நீங்களே நடத்துங்கள்"
அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த ரகசியத் தகவலில், "அமைச்சர்களுக்குத் துறை சார்ந்த அனுபவக் குறைவு இருக்கிறது என்பது யதார்த்தம். எல்லோரும் புதியவர்கள். ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிர்வாகம் தெரிந்தவர்கள். அதைச் சரிசெய்யும் பொறுப்பு உங்களுடையது. அமைச்சர்களை எதிர்பாராமல், துறைகளின் அன்றாடச் செயல்பாடுகளையும் முக்கியத் திட்டங்களையும் அதிகாரிகளாகிய நீங்களே முன்னின்று நடத்த வேண்டும்" என்று மிகவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுக்கும் கோட்டை வட்டாரம்!
முதல்வரின் இந்தத் திடீர் கண்டிப்பு, தங்களுக்கு நெருக்கமானவர்களின் பட்டியலோடு காத்திருந்த சில அமைச்சர்களுக்குப் பலத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தகுதி வாய்ந்த, திறமையான நபர்களை மட்டுமே அந்த 400-க்கும் மேற்பட்ட சீட்களில் உட்கார வைக்க வேண்டும் என்பதில் தலைமை அசைக்க முடியாத உறுதியோடு இருக்கிறது.
"நிர்வாகத் தூய்மை என்பது அமைச்சர்களின் அறையிலிருந்தே தொடங்க வேண்டும்" என்கிற இந்த அதிரடி ஆக்ஷன், தமிழக அரசியல் களத்தில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்திற்கான சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. கோட்டையின் இந்த புதிய அத்தியாயம் எப்படிப் பயணிக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications