டாக்டர் கிருஷ்ணசாமி மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
நெல்லை: இரவு 10 மணிக்கு பின்னரும் பிரசாரம் செய்ததை அடுத்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தென்காசி தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, புதிய தமிழகம் என நான்கு கட்சிகள் மோதுகின்றன.
புதிய தமிழகம் சார்பில் அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் தொகுதி முழுவதும் சுறுசுறுப்பாக பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 28ம் தேதி தென்காசி தொகுதிகுட்பட்ட குலசேகரமங்கலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் தேர்தல் விதிமுறைக்கு மாறாக இரவு 10 மணிக்கு பின்னரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கிருஷ்ணசாமி, அவரது கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது சேர்ந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கர்க் கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் வேட்பாளர்களை கண்காணித்து வருகிறோம். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications