ஈழம்: ஜெ. கொள்கையில் தெளிவு இல்லை - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
கோபிச்செட்டிப்பாளையம்: இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் ஜெயலலிதா முன்பு ஒரு கருத்தை கூறினார். தற்போது ஒன்றை கூறுகிறார். அவரிடம் இவ்விஷயத்தில் தெளிவான சிந்தனை இல்லை என ஈரோடு காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கை பிரச்சினையில் ஜெயலலிதா முன்பு, ஒரு கருத்தை கூறினார். தற்போது வேறு ஒன்றை சொல்கிறார். இது இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அவருக்கு தெளிவான சிந்தனை இல்லை என்பதையே காட்டுகிறது. இதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இலங்கை அரசு விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் இருக்கிறது. இதனால் விடுதலை புலிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
பூரண மதுவிலக்கு தான் காங்கிரசின் கொள்கை ஆகும். அதற்கு எப்போதும் நாங்கள் தடையாக இருக்க மாட்டோம். வெளிநாட்டு மதுபானங்களை அரசே விற்பனை செய்யும் போது, கள்ளை விற்பனை செய்வதில் தவறு இல்லை.
ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் பிரசாரம் செய்த போது, நான், கோபிசெட்டிபாளையம் தொகுதி மக்களுக்கு எந்த நல திட்டங்களையும் செய்யவில்லை என்று கூறியுள்ளனர். நான் செய்த திட்டங்களை புத்தகமாக வெளியிட்டு உள்ளேன் என்றார் இளங்கோவன்.