8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 12000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்!
மும்பை: எட்டு மாதங்களுக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 12000 புள்ளிகளைத் தொட்டுள்ளது.
இன்று சந்தையின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. எடுத்த எடுப்பிலேயே 592 புள்ளிகள் உயர்ந்தது சந்தையில். இதனால் 12000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 160 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த செப்டம்பருக்குப் பின் நுகர்வோரின் நம்பிக்கை இப்போதுதான் வெகுவாக மேம்பட்டிருப்பதாகவும், அதன் விளைவாக அமெரிக்க பங்குச் சந்தை வலுவடைந்திருப்பதாகவும் அதனாலேயே இந்த பாஸிடிவ் மாற்றம் என்றும் கூறப்படுகிறது.
இன்று மட்டுமே 731 புள்ளிகள் உயர்ந்து 12131 புள்ளிகளாக நிலைப் பெற்றது. நிப்டி 180 புள்ளிகள் உயர்ந்து 3654-ல் நிலை பெற்றது. ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ, எச்டிஎப்சி, மகிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ நிறுவனங்களின் பங்குகள் இன்று நல்ல லாபம் கண்டன.
இன்றைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனப் பங்குகள் ஒன்றுகூட நஷ்டத்தைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றம் ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. ஹாங்காங்கின் ஹாங்க்செங் 3.52 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இப்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 12134 புள்ளிகளாகவும், நிப்டி 3654 புள்ளிகளாகவும் உள்ளது.