ஜெ. முரண்பாடுகளின் மொத்தம் உருவம்-ப.சிதம்பரம்
காரைக்குடி: அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா முரண்பாடுகளிம் மொத்த உருவம். பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவையை ஆதரித்த அவருடன் நாங்கள் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை தொகுதியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்குட்பட்ட காரைக்குடியில் பிரசாரம் செய்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
வேலை உறுதி திட்டம் என்பது விவசாயிகளுக்கு இடையூறு இல்லாமல் விவசாய பணிகள் நடைபெறாத நேரத்தில் செயல்படுத்த உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டத்தில் 150 நாட்கள் வேலை வாய்ப்புகள் தருவோம் என்று அதிமுக கூறுவது இந்திய பொருளாதாரத்தை அறியாததற்கு சான்றாகும்.
இந்திய விவசாயிகளின் தேவைகளை அறியாதவர்கள் மனித சக்தியே இல்லாமல் பயிர்கள் விளைந்து விடும் என்று நினைத்து ஆதாயத்தை தேடுபவர்கள். இது குறித்த தேர்தல் அறிக்கை அறிவு சார்ந்த தேர்தல் அறிக்கையே அல்ல. அது வெறும் தேர்தல் வாணவேடிக்கை.
எழுச்சி நாயகன் ராகுல்...
நாளை 8ம் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி சிவகங்கையில் திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். ராகுல் காந்தி தமிழகத்தில் பேசும் முதல் பொதுக்கூட்டம் இது.
இளைய தலைமுறையின் எழுச்சி நாயகனாக அரசியல்வானில் உதயமாகி வரும் அவரது பேச்சை கேட்க அனைவரையும் அழைக்கிறேன். ராகுல் காந்தி பேசியதாக சில பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
இதுபற்றி அவரோடும், அவரது அலுவலகத்தோடும் நான் தொடர்பு கொண்டு பேசினேன். ராகுல்காந்தி பொதுவாகவே சில கருத்துக்களை கூறி வருகிறார். அதாவது தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது முடிவை மாற்றிக்கொண்டு ஆதரவு அளிக்க முன்வரும் என்றுதான் கருத்து சொல்லியிருக்கிறார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கே பெரும்பான்மை கிடைக்கும். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். தேவைப்பட்டால் ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஆதரவு தர முன்வருமானால் அந்த ஆதரவை ஏற்றுக் கொள்வோம் என்றும் ராகுல்காந்தி கூறி உள்ளார். இது புதிய கருத்து அல்ல.
2004ம் ஆண்டிலேயே சொல்லப்பட்ட கருத்து. இந்த கருத்து இன்றளவும் அனைத்து கட்சிகளாலும் சொல்லப்பட்டு வருகிறது. பாஜகவும் இதே கருத்தை கூறி உள்ளது. இதுபோன்ற கூட்டணியை அறிவார்ந்த கூட்டணி என்று அருண் ஜேட்லியும் கூறியுள்ளார். எனவே ராகுல்காந்தியின் கருத்து சர்ச்சைக்குரியதே அல்ல.
ஜெயலலிதா மதவாத தலைவர்...
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பல விஷயங்களில் காங்கிரசோடு முரண்படுகிற கட்சியாக இருந்து வருகிறது. அது ஒத்த கருத்துடைய கட்சியாக மாறும் சூழ்நிலை உருவாகும் என்று நான் நம்பவில்லை. அதிமுக மதசார்பற்ற கட்சி என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த கரசேவைக்கு ஆதரவு அளித்தவர்தான் ஜெயலலிதா. நரேந்திர மோடியுடன் நட்பு கொண்டு அவரது பதவி ஏற்பு விழாவுக்கும் சென்று வந்தார்.
சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து வருவதோடு சிறுபான்மையினரை அச்சுறுத்தும் பொடா சட்டம், கட்டாய மதமாற்ற சட்டம் போன்றவற்றை கொண்டு வந்து சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியவர். இவரை எப்படி மதசார்பற்ற தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும்.
அது மட்டுமின்றி கடந்த 4 வாரமாக அவர் தனது நிலைகளையும், முடிவுகளையும் மாற்றிக்கொண்டே இருக்கிறார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழும் ஜெயலலிதாவின் நோக்கம் இந்திய அரசை அமைப்பது அல்ல.
தமிழகத்தில் உள்ள திமுக அரசை கவிழ்ப்பது அல்லது கலைப்பதுவுமே ஆகும். இந்த நோக்கத்தோடு செயல்படும் அவரோடு காங்கிரஸ் கட்சிக்கு எப்படி உறவு ஏற்பட முடியும். இதுபோன்ற ஐயங்களை கிளப்பும் ஆதாரமற்ற செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.