தாயுள்ளம் கொண்ட தமிழ் தலைவி ஜெ.-டென்மார்க் சைவ தமிழ் பேரவை
பிலன்ட்: தனி ஈழம் அமைப்பேன் என உறுதியாக கூறியிருக்கும் ஜெயலலிதாவை தாயுள்ளம் கொண்ட தலைவி என டென்மார்க் சைவ தமிழ் பேரவை பாராட்டி கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து டென்மார்க் சைவ தமிழ் பேரவை, அவருக்கு அனுப்பியுள்ள கடிதம்..
செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கட்கு,
ஈழத் தமிழரின் தன்மானம் காக்கத் தலைநிமிர்ந்து புறப்பட்ட தமிழர் தலைவிக்கு டென்மார்க் தமிழ் மக்களின் வாழ்த்துக்கள்.
ஸ்ரீலங்கா சிங்கள அரசின் இன அழிப்புப் போரிலே சிக்குண்டு அப்போரின் கொடுமையிலே தங்கள் வாழ்வில் அத்தனையையும் இழந்து, தங்களைக் தினம் தினம் கொன்று குவிக்கும் அரக்கர்களின் பிடியிலிருந்து விடுபடமுடியாமல் திசைமாறிப் போருக்குள்ளும், கம்பிவேலிச் சிறைகளுக்குள்ளும் நடைப்பிணங்களாக வாழும் ஈழத் தமிழர்களுக்கோர் கலங்கரை விளக்காகத் தென்படத் தொடங்கியுள்ள உங்களை உலகத் தமிழ் மக்கள் எல்லோரும் ஓர் தாயுள்ளம் கொண்ட தமிழினத்தின் தலைவியாகவே பார்க்கின்றோம்.
உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்துக்காகத் தம்மை அர்ப்பணித்து வீதிகளில் இறங்கிப் போராடும் அதேவேளை சைவக் கோவில்கள், கிறிஸ்தவத் தேவாலயங்கள், மற்றும் மசூதிகள் எனப் பலவற்றிலும் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
'காரணங்கள் இல்லாமல் காரியங்கள் நடப்பதில்லை' என்பது போல வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் இலங்கை சென்றதும், அங்குள்ள தமிழர்களின் மனித அவலத்தை இறைவன் வடிவிலே வந்து உங்களிடம் முறையிட்டதும் கூட தமிழ் மக்களின் வழிபாட்டுக்காக ஆண்டவன் அருள்பாலித்த அனுக்கிரகம் என்றே கருதவேண்டி உள்ளது.
யார் தான் தடம் மாறிச் சென்றாலும் தாயானவள் தன் குழந்தைகளைப் பேணி உணவூட்டிப் பெரும் கருணை மழை பொழிந்து காப்பதுபோல எல்லோராலும் கைவிடப்பட்டு உண்ண உணவின்றிப் பட்டினியாலும், நோயினாலும், அழிவாயுதங்களினாலும் அல்லற்பட்டு மாண்டு கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்தைத் தலை நிமிர்த்தி அவர்களின் அன்னை பூமியிலே வாழவைக்கும் பொறுப்பை நீங்கள் கையெடுத்திருப்பது.
"தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
சகல உலகிற்கும் நீ தாயல்லவோ.."
என்ற அருட்பாடல் வரிக்கு வலிமை சேர்க்கின்றது.
நெஞ்சில் உரமுமில்லா, நேர்மைத் திறனுமில்லா வஞ்சகர்களால் வஞ்சிக்கப்பட்டுவிட்ட ஈழத் தமிழர்கள் புத்துயிர் பெற்றுத், தனித்தேசம் பெற்று, தனக்கொரு தனியாட்சி, தனக்கொரு தனிக்கொடியெனத் தலைநிமிர்ந்து வாழ வகை செய்வேனென்று புறப்பட்டுள்ள தங்களுக்கு வலிமைபொருந்திய வல்லரசு அமைய டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications