இலங்கை: இந்துக்களுக்குத்தான் பிரச்சனை-விஎச்பி
சென்னை: தனி ஈழத்தை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம். அங்கு நடப்பது தமிழர்களின் பிரச்சினை அல்ல, மாறாக இந்துக்கள்தான் அங்கு நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால்.
இலங்கைத் தமிழர்களின் அப்பாவி நிலையை, இனப்பிரச்சினையை இந்திய அரசியல் தலைவர்கள் ஆளாளுக்கு தங்களுக்கு விருப்பம் போல மாற்றி மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அசோக் சிங்கால், இப்பிரச்சினை தமிழர்களின் பிரச்சினை அல்ல என்றும் மாறாக, இது இந்துக்கள் சந்தித்து வரும் பிரச்சினை என்று கூறியுள்ளார் சிங்கால்.
இன்று சென்னை வந்த சிங்கால் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் பேசும் இந்துக்களை அந்நாட்டு அரசு படுகொலை செய்து வருகிறது.
இலங்கை நாட்டில் இருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த மத்திய அரசால் முடியவில்லை.
இலங்கையில் இன்று நடப்பது போன்றே கிழக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்கள் அகதிகளாய் வந்த போது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி எடுத்த உறுதியான நிலைப்பாட்டினால் வங்காளதேசம் உருவானது.
இன்று இலங்கையிலும் அதே சூழ்நிலை தான் உள்ளது. அதே நேரத்தில் இந்திய அரசுக்கு உறுதியான செயல் திட்டமும், சாதுர்யமும் இல்லை. இலங்கை பிரச்சனை என்பது வெறும் தமிழர்கள் பிரச்சினை மாத்திரமல்ல. இது உலகளாவியுள்ள இந்துக்களின் பிரச்சினை.
இலங்கை இந்துக்களுக்கு, பாரதத்தில் உள்ள நூறு கோடி இந்துக்களும் பக்கபலமாக நின்று இருக்க வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குழம்பி போய் உள்ளதோடு, சரியான தீர்வை கூற முடியாமல் மக்களை குழப்பி வருவதால் இந்த பிரச்சினை வெறும் தமிழர் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படுகிறது.
தமிழ் ஈழம் அமைப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இலங்கையில் தமிழர்கள் சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ தீர்வு காண வேண்டும். தேவைப்பட்டால் ராணுவத்தை அனுப்பி தீர்வு காணலாம் என்றார் சிங்கால்.












Click it and Unblock the Notifications