பாக்.கை பிரிக்க முடிந்தபோது ஏன் இலங்கையைப் பிரிக்க முடியாது? - ஜெ. கேள்வி
சென்னை: இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப முடியாது. தனி ஈழம் அமைக்க முடியாது என கூறும் பிரதமர் மன்மோகன் சிங், பின் எந்த அடிப்படையில் வங்கதேசத்தை இந்திரா காந்தி உருவாக்கித் தந்தார் என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா.
சென்னையில் நேற்று பிரசாரத்தை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப முடியாது, தனி ஈழம் அமைக்க முடியாது என கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு ஜெயலலிதா, அப்படியானால் இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கிழக்கு பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பி எப்படி வங்காளதேசத்தை உருவாக்கி கொடுத்திருக்க முடியும். இதற்கு அவரை விளக்கம் கொடுக்க சொல்லுங்க என்றார்.
இலங்கைக்கு பயங்கர ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி தான் கொடுத்திருக்கிறோம் என்று பிரதமர் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ஆயுதங்கள் எங்கிருந்து இலங்கைக்கு சென்றாலும் ஆயுதம் ஆயுதம் தான். அது மக்களை கொல்ல கூடிய ஆயுதம். கொல்ல முடியாத ஆயுதம் என்று பிரிக்க முடியாது. இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்புவது தவறு என்றார்.
காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று ராகுல் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அவர் அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே? என்றார் ஜெயலலிதா.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா? என்ற கேள்விக்கு, நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
இப்போது என் கவனம் முழுவதும் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் பெறுவதிலே தான் இருக்கிறது என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications